வாழ்ந்த வீடு வடிவிழந்து
போயிற்று.
வீட்டிற்கு தேவையானவர்கள்
வீதிவழி போனார்கள்.
காற்றின் மௌனம்
பேரிரைச்சலாயிற்று.
மாமரத்தினடியில் விளையாடிய
கிட்டிப்புள்ளும் கிளித்தட்டும்
நினைவுப் பதிவில் நின்றாடுகின்றன.
கிணறும், வாய்க்காலும், வரப்பும்
தீண்டாத துலாக்கொடியுடன்
பார்வைக்கு வைக்கப்பட்டு
பத்தியப்படாமல் போயிற்று.
கூப்பிடு தொலைவிற்கு மனிதசஞ்சாரமற்ற
வெற்றிடப் பெருவெளி.
கூடி வாழ்வதற்கான பெருந்துணையின்றிய
வாழ்வின் கூத்து.
விடுமுறைக்காலத்தின்
பெருந்துயர் படிந்த நினைவுச்சிதறலாக
சாவகச்சேரி- என்வீடு எனக் கழிகின்றது
என் மனஇறுக்கம்.
மகளின் கைபற்றி
இது” என்வீடு” எனச் சுட்டுகையில்
அம்மாவும் அப்பாவும் தங்கைகளும்
முற்றத்து மாமரத்தினடியில்
முழுக் கனவாகப் போயினர்.
எப்போது புலரும்
பழைய பனிக்காலம்?
மறுமொழியொன்றை இடுங்கள்