ஆருத்ரா எழுதியவை | நவம்பர் 18, 2012

பாட்டுப்பெட்டி-2

பாட்டுப்பெட்டி இதுவரை கேட்டு பரவசமான இசையை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் வரையப்பட்ட பதிவு. இசை எல்லை கடந்த மொழியின் பரிமாணம். இசைக்கோர்ப்பிற்குள் தனித்து ஒரு மொழியை அடையாளப்படுத்தும் பண்பற்ற இலக்கணம் அமைவதில்லை. எந்த மொழியிலமைந்த பாடலாயினும் கேட்டவுடன் மனதிற்கு நெருக்கமான ஒரு தன்மையை இசைச்சுரம் அமைத்து விடுகின்றது. இசை எல்லை கடந்த இலக்கணம் என்றால் காதல் எல்லை கடந்த இலக்கியம்.

எண்பத்து ஒன்பதாம் ஆண்டு என்று நினைவு. அப்போது தான் நான் சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்தேன் என்று சொல்ல முடியாது.அடித்து விரட்டப்பட்டு புகலிடம் தேடி வந்திருந்தேன் என்பதாக வெளியில் சொல்லிக் கொள்ளலாம் தப்பில்லை.எனக்கு சுவிஸ் மிக அந்நிய பூமியாக சாவகச்சேரிப் பரப்பிலிருந்து நீங்கி வேறு ஒரு கலாச்சார வாழ்வியலுக்கு என்னை பொருத்த எத்தனித்து முடியாத கனத்த துயரப்படிமமான இடமாக ஆகிப்போயிருந்த பொழுதொன்றில்….

“லம்பாடா” என்ற இந்தப்பாடல் சுவிஸின் பட்டி தொட்டி எங்கும் பரவலாக புசிக்கப்பட்டுக்கொண்டிருந்த இசை. “லம்பாடா” என்பது ஸ்பானிஸ் கலாச்சார நடனம். இரண்டு கால்களுக்கிடையில் நடன ஜோடியின் ஒரு கால் இணைக்கப்பட்டு ஆடப்படும் ஒரு நடனவகை என வரையறை செய்யப்பட்டிருந்தாலும் அந்த இசை எங்கெங்கோ செல்லும் என் மேகங்கள்.

நான்கோ ஐந்தோ நிமிடங்கள் கொண்ட பாடலில் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் மிகச்செறிவான ஒரு காதல் கதை பதிவாக்கப்பட்டிருப்பது தெரியும். கண்களின் சிறு பதின்ம வயதிற்குரிய ஏக்கங்கள் அழகாக உள்வாங்கப்பட்டிருக்கும். காதலை பற்றி பத்தி பத்தியாக எழுதிச் செல்லலாம். அதுவல்ல நோக்கம்.

பாட்டுப் பெட்டியில் “லம்பாடா” வை இணைக்க அற்புதமான இசைக்கோர்ப்பு, காட்சிப்படுத்தப்பட்ட விதம், ஒரு கறுப்பின சிறுவன், வெள்ளை வெளேர் சிறுமி, வேறுபாடுகளை கடந்து காதல் கொள்ளும் தருணம் என நிறையச் சொல்லலாம்.

ஒரு முடிவற்ற நீண்ட கடற்கரையில் இயங்கும் உணவகத்தில் தந்தைக்கு உதவியாக வெள்ளை வெளேர் சிறு பெண். உணவகத்தின் ஒரு பரப்பில் நடனக்குழுவும் பாடகியும். ஆடுவதற்கு தோதான ஜோடியின்றி ஏக்கம் தோய்ந்த சிறுவன். அவர்களுக்கிடையிலான முதல்பார்வை என சின்ன சின்ன வனைவுகளுடன் இலகுவான ஒளிப்பதிவில் அற்புதமான காட்சிப்படிமம்.

இடையில் கோபம் கொண்டு தந்தை கை நீட்டுவது, அதையும் உடைத்துக் கொண்டு அந்த ஏக்கம் நிறைந்த சிறுவனுடன் நடனமாட காதல் கொண்டு விளைவது என பரந்து விரிந்த அழகான லம்பாடா இசை காதலை மனதிலிருத்தி செய்யப்பட்ட பாடல். தந்தை கோபப்பட்டு அடிக்க வரும் தருணத்தில் லம்பாடா பாடகி தந்தையை இழுத்து வைத்து நடனமாடுவதும் சிறு சிரிப்புடன் வன்மத்தை மறப்பதும் அழகுக்கவிதை காட்சியமைப்பு.

எப்போதும் காதலென்பது மிக இறுக்கமான சூழ்நிலைகளைக் கொண்டிருப்பதில்லை. இறுக்கத்தை மீறிக் கடந்து விட்டால் அது தன் இயல்பிற்குள் மீண்டு விடுகின்றது. காதல் வாழ்க்கையின் வனப்பு; சுந்தரகாண்டம்.

“லம்பாடா” பாடலைப்பாருங்கள்.

எண்பத்து மூன்றாம் ஆண்டுகளில் ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒரு பாடல் மிகப்பிரபலமாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. FREDDY SILVA என்ற சிங்கள நகைச்சுவை நடிகர் பாடகர் இசைத்த அந்தப்பாடல் ஊர்ப்புறத்திலிருந்து கொழும்பு மாநகருக்கு வந்திறங்கும் நாட்டுப்புறத்தான் தோற்றத்தில், கையில் குடையுடன் கொழும்புத் தெருக்களில், வாகன இடுக்குகளில் நுழைந்து எழுந்து பாடும் கேலியான நகைச்சுவைப் பாடல். குண்டுமணியை விளித்து கேலிகளால் நிரவப்பட்டது இந்தப்பாடல்.

ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் லலிதா ஜீவல்லர்ஸ் ஆதரவில் தமிழ் திரை ப்படம் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் தருணங்கள் தான் சாவகச்சேரிப்பரப்பில் தொலைக்காட்சிப் பெட்டிகள் அறிமுகமான காலங்களாக விடிகின்றன. கறுப்பு வெள்ளையில் 14″ அந்தச் சிறு பெட்டிக்கூடாக ரூபவாகினியால் ஒளிபரப்பப்படும் அரதப்பழசான தமிழ்ப்படங்கள், KNIGHT RIDER எல்லாம் பார்த்து வியந்த காலங்கள்.

இப்போது விஞ்ஞானத்தின் விரைவில் எல்லாப் பழைய சங்கதிகளும், எல்லாப் புது சங்கதிகளும் உங்கள் விரல் நுனிகளுக்குள் வித்தை காட்டுகின்றன. மாஜா-பஜார் வேண்டுமா? ஒரே சொடக்கில் YOU TUBE னூடாக திருச்சி லோகநாதன் “கல்யாண சமையல் சாதம்” பாடத்தொடங்குகின்றார். இன்னொரு சொடக்கில் “வாராய் நீ வாராய்” என CS ஜெயராமன் தடித்த குரலில் பரவசப்படுத்துகின்றார். இணையம் எல்லாவற்றையும் இலகுவாக்கி வைத்திருக்கின்றது.

பண்டைய கால மன்னர்கள் அனுபவித்திராத பல வசதிகளை இன்றைய நிலையில் ஒரு சாதாரண மனிதன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக ஜக்கி வாசுதேவ் தனது புத்தகமொன்றில் குறிப்பிட்டுள்ளது வாழ்வியலின் யதார்த்த பார்வை.

ஒரு மனிதன் மிக்க புகழுடன் பணச்செறிவுடன் வாழ்ந்து விட்டு, பின்னாட்களில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நடுத்தெருவில் நிற்பது கலைஞர்களுக்கே உரித்தான சாபம். ஏப்போதும் கற்பனை உலகில், சிருஷ்டிப் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் அவர்களால் நிகழ்கால நடைமுறைகள் உள்வாங்கப்படுவதில்லை என்ற காரண விளைவு காரணமாக புகழ் போதை கடந்த நிலையில் வறுமைக்குள் வீழ்த்தப்படுகின்றார்கள். FREDDY SILVA வறுமையில் புள்ளி கொண்டு எழுந்து அற்புதமான நகைச்சுவை நடிகர், பாடகர் என பல அவதாரங்கொண்டு மிக்க வசதியுடன் வாழ்ந்து இறுதிக்காலங்களை கார் விடுவதற்கு பயன்படும் CAR SET இனுள் கழித்த மானுடன்.

1938 – 2001 இவரின் காலப்பகுதி.

இசையை ரசிப்பதற்கு இனவாதம், சமகால அரசியல் என்பவற்றை மூட்டை கட்டி வைத்து விட்டு இயல்பு ரசனைக்கு கொண்டு வரலாம். தப்பென்று ஒன்றில்லை

1.குண்டுமணி மன்னாரங் பிட்‌டிவெல்ல

2.PANKRITTA தக்கிட தரிகிட   பாடல் கேட்க இணைப்பை அழுத்துங்கள்.

இசை காலத்தின் கண்ணாடி. சில திரை இசைப்பாடல்கள் நாம் அந்த இசையை கேட்டுப் பருகிய தருணங்களுக்கு எம்மை அழைத்துச்சென்று, நினைவின் அடுக்குகளை நிரவி விடுகின்றன. இன்று இடைக்காலப் பாடல்கள் என்றழைக்கப்படும் மத்திய காலத்தை சேர்ந்தவை எங்களது எண்பதுகளை நினைவு கூர்பவை.

வாழ்க்கை இசையூடாக பரிணமிக்கின்றது. அழகான நாட்களானவை இசைக்கூடாக பயணப்படுகின்றன.

16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற பாடலான “செந்தூரப்பூவே பாடல்” மெல்லிய இசை அதிர்வுகளுடன் இலகுவாக மனம் என்ற மாயத்தை எங்கோ கட்டியிழுத்து விரைகின்றது. ஆரவாரமற்ற இரவுப்பொழுதுகளில் மௌனத்தின் துணையிருப்புடன் இந்தப்பாடலை கேட்பீர்களாயின் ஒரு காலத்திற்குள் கட்டி இழுத்துச் சென்று கண்ணீர் வரவழைக்கும்.

செந்துாரப் பூவே  பாடலுக்கான  இணைப்பு.

கர்நாடக இசை விமர்சகர்களில் முதன்மையானவர் காலம் சென்ற பி.வி.சுப்ரமணியமம் என்றழைக்கப்படுகின்ற “சுப்புடு” அவர்கள். செந்தூரப்பூவே பாடலில் இளையராஜா என்ன மாயம் செய்தாரோ? இந்தப்பாடல் மெதுவாக உள்ளத்தை எங்கோ அழைத்துச் செல்வதாக சுப்புடு கூறியிருந்தது இளையராஜாவிற்கான சிறப்பு அங்கீகாரம்.

சுப்புடுவின் கடுமையான இசை விமர்சனங்களுக்குப் பயந்து “நாய்கள் மற்றும் சுப்புடுவிற்கு இங்கு அனுமதி இல்லை” எனMUSIC ACADEMY சென்னையில் விளம்பரத்தட்டி வைத்தது.

செந்தூரப்பூவே என்றால் அது என்ன பூ? செவ்வரத்தையா என ஒருமுறை விமர்சனம் வந்த போது பாடலின் சந்தத்திற்கு இசைவாக சொற்களை கோர்க்க முற்பட்ட வேளையில் செந்தூரப்பூவே என்ற சொல் வந்து விழுந்ததாக பாடலாசிரியர் கங்கைஅமரன் குறிப்பிட்டார். செந்தூரப்பூ என ஓரு பூவும் கிடையாது எனக் கூறிவிட்டார். ஆனாலும் செந்தூரப்பூவிற்குள் ஏதோ நினைவுகளும், ஞாபகங்களும், கனவுகளும் புதைந்திருப்பதாக கண்ணீர் தெரிவிக்கின்றது.

பின்னர் 1988 களில் செந்தூரப்பூவே என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி பின்னாட்களிலும் ஒரு காலப்பதிவை இசை செய்துவிட்டுப் போயிருக்கின்றது.

செந்துாரப் பூவே (1988) பாடலுக்கான  இணைப்பு.

இவ்விடத்தில் 1988 கள் என்னை மேட்டுப்பாளையத்திற்கும் ஊட்டிக்கும் அழைத்துச் சென்று சுகஅனுபவம் செய்கின்றன. ஊட்டி என்ற மலை வாசஸ்தலத்தின் அடிவார ஊரான மேட்டுப்பாளையம் பின் இரவுப்பனிப் பொழுதுகளையும் மொட்டை மாடியில் அண்ணாந்து பார்த்த அழகான நட்சத்திரங்களையும் ஞாபகப்படுத்தும்.

இசை என்னை எங்கோ அழைத்துச் செல்கின்றது.மெலிதான மனவருத்தங்களையும், கவலைகளையும் கரைத்துவிடுகின்றன இசைச்சுரங்கள்.

******************************************************************************************************

அடுத்த பதிவில் “அப்புவுக்கு வலிக்கும்”.

காதல் என்ற மனித உயிர்ப்பிடிப்பின் அர்த்தம் பொதிந்த சொல் எல்லோருக்கும் சந்தோசத்தை அள்ளித்தருவதில்லை.

துன்பத்துள் தோய்ந்து கண்களில் கண்ணீர் தேக்கி காலாகாலத்திற்கும் மழைக்குள் நின்று அழும் மனிதனின் ‌சோகம் வெளிப்பரப்பில் யாருக்கும் தெரிவதில்லை. சில சமயங்களில் கண்கலங்கி விட்டு அடுத்தவர்கள் பார்த்துவிடப் போகின்றார்களே என்று இயல்பு வாழ்க்கைக்குள் தங்களையும் கட்டி இழுத்துகொண்டு விரையும் மனிதப்பிறப்புகள் தானா வேடிக்கை மனிதர்கள்?

********************************************************************************************************

மறுமொழி எழுதியவர்

Natarajan Sundharabuddhan படித்தேன். பாடலைக் கேட்டேன். இனிமையின் ராகம்.

ஆருத்ரா எழுதியவை | நவம்பர் 16, 2012

இளையராஜா என் காதலுக்கு இசையமைத்தவர். பாகம்-4

பதின்ம வயதில் தோன்றும் பக்குவமற்ற தன்மையில் காதல் தோன்றியதும், அதுவே காலா காலத்திற்கும் கனவின் இருப்பாக மேல்நிலைப்படுத்தப்பட்டதும் எனக்கு நடந்தேறி இருக்கின்றது. பதின்ம வயதை சிலர் முளைத்து மூணு இலை விடாத வயதாக வர்ணித்தாலும் காலா காலத்திற்கும் மிகப்பெரும் உண்மையான அன்பையும், மீதி வாழ்நாள் காலத்திற்கான நீர்ப்பிடிப்பான உவகைத்தருணங்களையும் அந்த வயது தான் அள்ளித்தந்திருக்கின்றது.

அவள் என் உயிரின் இருப்பு. பக்குவவயதில் எனக்கு பிறந்திருக்கும் உயிர்த்துடிப்பான வாரிசுகளுக்கு மூத்த முதல்இருப்பு; காதல் குழந்தை ; காதல் தாய் எனக்கு அவளாக அமைந்தாள்.

girl_w_pigion1.38ci0rkktxci80wkcgssg84so.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.thஒரு முதல் பார்வையிலேயே யாரிடமாவது உங்களை முழுமையாக ஒப்படைத்து இவள், இவன் என அந்திம காலம் வரை பாதுகாப்பையும் இனிதான தருணங்களையும் தர முடியுமென கங்கணம் கட்ட முடியுமானால் காதல் பிறந்திருக்கின்றது; இளையராஜா மீண்டும் இசையமைக்கப்போகின்றார் என்று அர்த்தம். இளையராஜா அற்புதமான சிருஷ்டிகர்த்தா. எனக்கான காதலுக்கு இசையை விசிறி விட்டதும் “இந்தா வைத்துக்கோ” என்று வீசி விட்டதுமான காதல் தளத்தின் இராகதேவன்.

அது பதின்ம வயதுதான். எனக்கு ஒன்றுமே தெரியாதுதான். ஆனால் காதல் தெரிந்திருக்கின்றது. அவளுடன் சேர்ந்திருக்க பிரியப்பட்டேன். எனக்கான துன்பத்திற்கான சுமைதாங்கியாக வாழ்நாள் பரப்பில் வலம் வருவாள் என்று எதிர்பார்த்து ஏங்கி அவள் பின்னால் காதல் கொண்டு அலைந்த தருணங்கள் பூக்கள் பூத்த தருணங்கள்.

விருப்பையும் இருப்பையும் ஒருசேர சுகித்த தருணங்கள். அவளின் சின்னஞ்சிறு கைகள் எனக்கு அபயமுத்திரை அளித்ததாக கனவுகள் சாட்சி சொல்கின்றன.

water copyபிரம்மனின் தெளிவான வடிவச் செதுக்கல் ஒரு உயிர்த்துடிப்பாக நடமாடியதாக என் காதல் எனக்கு சொல்லிற்று. மீண்டும் அந்த தனியார் கல்வி நிலையப்பக்கமே என் கனவு தலை வைத்துப் படுக்கின்றது. பூலோக சுவர்க்கம் என்பது ஒரு அடையாளத்திற்கான சொல் எனினும் நேர்வழிப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட நிஜ சுவர்க்கமாக அந்த தனியார் கல்வி நிலையம் திகழ்ந்தது.

பாடசாலைக்கு பின்னரான பாய்ந்தோடி வீடு விரைந்து, வெள்ளைச்சீருடை விட்டுத்தொலைத்து இணக்கமான  உடைதரித்து- இயல்பான கனவு சுமந்து , திரும்ப பாய்ந்தோடிப் பறக்கின்ற தருணங்கள் அதி அற்புதமானவை. ஆங்கே போய்ச் சொல்வதற்கும், பேசுவதற்கும் நிறைய நினைவுகள் சுமந்து ஏகி விரைந்து கண்களால் அவளைத் துழாவி, அந்த வனப்பான சிரித்த முகம் ஏற்று, நண்பர்களுடன் கைகோர்த்துக் கொள்கின்ற அழகியல் அங்கு நடந்தேறியது.

கல்விக்கு முன்னரான பேச்சுத்தளத்தில் எல்லோரும் கனவுகள் கிறுகிறுக்க கதைத்து தள்ளி இனிப்பேச ஒன்றுமேயில்லை என மௌனித்து, இன்னும் ஏதோ சொல்ல விளைகின்ற ஏக்கத்து தொனிப்பொருட்கள் ஏராளமிருந்தன.

கற்பிக்கும் ஆசிரியரை உடல்மொழியால் வெளிப்பரப்பில் உலவவிட்டு சிரிப்பில் ஆழ்த்துவதற்கு சில நண்பர்களும், கதைத்துப் பேசி சிரிப்பை சிதறவிடுவதற்கு பல நண்பர்களும், பார்த்து இன்புற்று தலையசைவை கூந்தல் ஒதுக்கித்தள்ளும் லாவகத்தை கைஅசைத்து பேசும் காட்சியை கண்டு களித்து இன்புற்றிருக்க நானும் இருந்திருக்கின்றோம். வேறு என்ன சொல்ல? காதல் தடதடத்து விரைந்தது.

challaram_love_couple_12794அந்த தனியார் கல்வி நிலையத்தில் கணிதவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.கற்பித்த கணித ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அந்த கண்டிப்பும் கோபமும் பெரும்பாலான தருணங்களில் கைகளூடாக முதுகில் பேசும் அறைகளாக இருந்திருக்கின்றன.

அவள் மீதான அன்புப்பிடிமானத்தில் அவளது பெயரின் முன்னாலுள்ள N என்ற இனிஷியலை தமிழில் என் என்று அவளின் பெயருடன் இணைத்து உள்ளங்கைகளில் எழுதி அடிக்கடி பார்த்துக் கொள்ளும் தருணம் அந்த கணித ஆசிரியர் என்னை கவனித்திருக்க வேண்டும். மற்றவர்கள் பாடத்தினை குறிப்பெழுதிக் கொண்டிருக்க என்னருகில் வந்தவர் என்கைகளை மெதுவாக விரித்துப் பார்த்தவேளை அடுத்து நடக்கப் போகும் அவமானங்களுக்காக காத்திருந்து கண் நிமிர்த்தினால் ஒன்றுமே ஆகவில்லை. சிறு முறுவலுடன் எனது உள்ளங்கைகளை திருப்பி மூடி இறுகப்பற்றிவிட்டு தொடர்ந்த ‌அவர் என் கடவுள். அவளை கை பிடித்து பத்திரமாக வைத்திருக்க வாழ்த்தியதாக எடுத்துக் கொண்டேன்.

என் என்றுமே எனதாகவில்லை. அவளைப் பத்திரப்படுத்தவும் முடியவில்லை. இயலாமை குறித்த துயர் என்னுள் ஆழமாக வேர் பிடித்துள்ளது. எல்லாவற்றையும் எனதாகப் பார்த்த தருணங்களில் விதி மறுபார்வை பார்த்துள்ளது. விதிக்கு என்னைத் தெரியாது. என் விழிகளுக்கு கண்ணீர் மறவாது.

ஏறுநெற்றி- வாரிமுடித்த கூந்தல்- சற்று விடைத்த நாசி – கீழ் உதட்டின் சிறுபள்ளம் அவளைப் பிடித்துப் போக அதுவும் காரணமோ என்னமோ? எனக்கு காதல் பிடித்தது. காதல் பயணத்திற்கு இலக்குகள் தான் முக்கியமானவை. இலக்குகள் நோக்கிப் பயணிப்பதற்கு இரகசியங்கள் இணக்கமானவை.

kathalஅவளிடம் ஏதோ ஒன்று இருந்திருக்கின்றது. என்னை ஆகர்ஷிப்பதற்கு அவைகளே போதுமானவையாக இருந்திருக்கின்றன. அவளுக்கு அந்தச் சின்னஞ்சிறு வயதில் வந்து போகும் ஆஸ்துமா தொல்லை அவள் அதன் காரணமாக வராத தருணங்களில் என்னை அழ வைத்திருக்கின்றது. அவளின் சிரமங்கள் என்னை சித்திரவதை செய்திருக்கின்றன. அன்பின் சிரமங்களுக்கிடையில் அழகை ரசிப்பதும் அழகான சிரமங்களுடன் அன்பை பேணுவதும் காதலுக்கான தனிச்சிறப்பு அடையாளம்.

மழையையும் தனிச் சிறப்பாக குறிப்பிட்டேயாக வேண்டும். மழை என்பது உயரே உள்ள வானத்துக்கும் கீழேயுள்ள தரைக்குமான உறவின் நீள்கோடு. முதன்முதலாக அவளுடன் உரையாட முற்பட்ட- முதன் முதலாக அவளுடன் என்னை பகிர்ந்து கொள்ள முற்பட்ட வேளையில் பெரும் சத்தத்துடன் பெய்த மழை, இயற்கை காதலை ஆசீர்வதித்த தருணமாக இருக்க வேண்டும். அன்று அவள் அணிந்திருந்த ரோஸ் கலர் அரைக்கை சட்டையும் அதற்கேற்ற வண்ணத்தில் அணிந்த கீழ் உடையும் பெருமையான அழகாக தென்படுகின்றன. அன்றுதான் அவள் பெரிதாக வெட்கப்பட்டிருக்க வேண்டும்.

எதைக் கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய் – நான்
வெட்கத்தை கேட்டால் எதைத் தருவாய்? -தபூசங்கர்

முகத்தில் சிறிய பெரிய தயக்கங்கள். வெட்டி வெட்டிப் பார்த்த விழிகள். முட்டி முட்டி பார்த்த எண்ணங்கள். சேவகிகளால் அழைத்து வரப்பட்ட அரண்மனைக் கிளி போல அவள் மெதுவாக தோழிகளால் அழைத்து வரப்பட்டாள். அவளது தோழிகளில் ஒருத்தி எனது பால்யகால நெருங்கிய தோழியாகவும் என்னை புரிந்தவளாகவும் இருந்ததில் காதல் கைமாறு.

மிகப்பழமையான புளியமரமும் மிகப்பழமையான காலமுமாக இடம் காலம் அறிந்து கழிந்த காதல். சாவகச்சேரி மகளிர் கல்லூரி கழிந்து நூற்றியம்பது மீற்றர் தொலைவிற்குள் வருகின்ற புளியமரம். ஒரு குச்சொழுங்கையின் முதல் தொடக்கத்தில் நிழல் தரும் நினைவுகள்.

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?-கபிலர்

girl-dancing-rain_thumb2மழையும் காற்றும் எல்லோருக்குமானது. இடையில் நீக்கி பெய்வதில்லை. நீக்கி வீசுவதில்லை. மழை தருமோ என் மேகம். ஒரு நீண்ட மௌனம். அவளின் பெரிதான வெட்கம், நினைத்து வைத்து மறந்த பேச்சாடல், திடீரென பெய்த பெருமழை, வீதிவழி அருகி விரைந்த அவளின் அண்ணன் இவையெல்லாம் சேர்ந்து பின்னொருநாளில் பேசிக்கொள்ளலாம் என்ற தீர்மானம்.

ஆனாலும் அந்த பெருமழைப் பொழுதின் முதல் சந்திப்பு நெருக்கமான நினைவாக இன்றளவும் நின்று தொலைக்கின்றது. அவளைத் துரத்தி ஓடிய அந்த வயல்வெளி வீதிகள்- மாரிகாலத்து சிறுகுளிர் – வயலுக்கூடான மென் காற்று- அவளும் அவளது குண்டுத் தோழியும். பொத்திப் பொத்தி என்னென்ன மாயம் வைத்தாய் இறைவா?

பால்ய காலத்தில் அவளுடன் வாழ்ந்து பார்க்கும் ஆசை வந்திருக்கின்றது. வாழ்ந்து பார்க்கும் ஆசை வந்ததால் தான் காதல் வந்திருக்கின்றது. அவளின் சிறுமடி, அதிலான உறக்கம், அதற்கான கிறக்கம்,சிறுவயதிலேயே கனவாக அனுபவித்திருக்கின்றேன். இன்றளவும் நீள்துயரமாகவும் உணர்கிறேன்.

இளையராஜா இவ்விடத்தில் வந்து வைரமுத்து துணையுடன் இசையமைத்தது எனக்கான எண்பதுகளில். இவ்வயதில் இப்பாடலின் முழுஅர்த்தம் புரிந்து அழகான பாடலுக்குள் என்னையும் அவளையும் பொருத்திக் கொண்டேன். இளமை தொடங்கி முதுமை வரைக்குமான அக்காதல் மாய்ந்து மாய்ந்து வைரமுத்து வரிகளால் வரைந்தது. பாய்ந்து பாய்ந்து என்மனம் காதல் கொண்டது.

ஒரு குங்கும செங்கமலம்.
இளமங்கையின் தங்கமுகம்.
முதுமை ஒருநாள் நமை வந்து தீண்டும்.
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்.
முடியை பார்த்தால் முழு வெள்ளை.
மடியில் தவழும் மகன் பிள்ளை.
நீ ஏந்திக் கொஞ்ச … நான் கொஞ்சம் கெஞ்ச..
பூப்போல பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்  நீ சாய்ந்திருக்க பசியடங்கி நான் ஓய்திருக்க!
இருக்கும் வரைக்கும்  எனைத் தினசரி அனுசரி!

காதலின் பெரும் கருத்தை விதைத்த அவளுக்கான பாடலில் இடையில் ஒருவரி வரும்.

சாம்பல் ருசிக்க தனியாவாய்!
காயைப் புசிக்கும் கனியாவாய் !!

twoஎங்கள் கல்லூரியின் மதிலோரத்தேமாவும் நாணிக்கொண்டு காதல் கொள்ளும். பால்ய காலநினைவுகள் கசிந்துருகி வளர்ந்து வசந்தத்தின் பரிபாஷையாகி மௌனத்தில் திகைக்கின்றது.

இது மௌனமான நேரம்.
மனதில் ஓசைகள்! இதழில் மௌனங்கள்!!
ஏனென்று கேளுங்கள்.
குளிக்கும் ஓர் கிளி. கொதிக்கும் நீர்த்துளி.
கூதலான மார்கழி. நீளமான ராத்திரி.

நீ வந்து  ஆதரி.

வைரமுத்து உணர்ச்சிப் பெருக்கில் வரைந்து போட இளையராஜா காற்றின் கங்குகளுக்கு இசைபரப்ப எங்கும் நெருப்பு பற்றிக்கொண்டது. காதல் என்று பெயர்.

புளியமரம் மௌனித்து தனித்து நிற்கின்றது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஆருத்ரா எழுதியவை | நவம்பர் 1, 2012

அது ஒரு கனாக்காலம் – நாக.தயாகரன்.

அந்திமநேரத்தில் உயில் எழுதும் வயோதிகர்கள் தட்டுத்தடுமாறுவது போன்றதான உணர்வு ஆருத்ராவிற்காக பதிவு எழுதத்தொடங்கிய பின்னர் எனக்கும் இருப்பதாக தெரிகின்றது. (நல்லவேளை நமக்குத்தான் உயில் எழுதவேண்டியதாக எதுவும் இல்லை….)

நான் சொல்லவருவது என்னவென்றால் சம்பவங்களும், கதைகளும் மூளைப்பரப்பின் இடுக்குகளெங்கும் தொங்கிக்கிடக்கின்றன. அவற்றை கோர்வையாக்கி கதையாகவோ, பதிவாகவோ கொண்டுவர வேண்டும். ஆனால் அவை காலக்கோர்வையின்றி பின்னும், முன்னுமாக தொடர்பின்றி தொத்திக்கிடக்கின்றன. எனவே பதிவை வாசிக்கும் அன்புக்குரியர்கள் நான் சொல்லும் சம்பவங்களில் காலப்பிழை, தொடர்புப்பிழை போன்ற பிழைகள் இருப்பதாக மனம்வருந்த வேண்டாம் என வருந்திக் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இதுதான் நான் கடந்த பதிவில் சொல்லியிருந்த இந்துக்கல்லூரி கனவிலிருந்தவன் ஸ்ரான்லிக்கு ஜாகா வாங்கிய கதை.

இன்றும் கந்தர்மடத்திலிருந்தே ஆரம்பிக்கலாம். கந்தர்மடத்திலிருந்து நான் படித்த யாழ்.இந்து ஆரம்பபாடசாலை ஏறக்குறைய இரண்டு கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்திருக்கலாம். (இப்போதும் அது அங்கேயே தான் இருக்கும்) அங்கே படிப்பதாலேயே அங்கு படிக்கும் எல்லோருக்கும் தாங்கள் எல்லோரும் வருங்கால இந்துக்கல்லூரி மாணவர்கள் என்கின்ற கற்பனை ஒன்று தொற்றிக்கொள்வதுண்டு. இப்போதும் அவ்வாறான கற்பிதம் ஒன்று வளர்ந்திருப்பதாக எனது மருமகன் மூலம் அறியக்கிடைக்கிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை. இந்துக்கல்லூரி என்பது வேறு. இந்து ஆரம்ப பாடசாலை என்பது வேறு. இந்துக்கல்லூரியில் சேர்வதற்கான நடைமுறைகள் தனியானவை. இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு என அதில் தனியான எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

எனது வீட்டிற்கு அருகிலேயே 500மீற்றர் தூரத்திற்கு உட்பட்டும் ஒரு பாடசாலை இருந்தது. அதற்கு இருக்க கூடிய பழம்பெருமை என்பது அலாதியானது. ஆனால் பழம்பெருமை ஒன்று மட்டுமே எப்போதும் உதவாது என்பதற்கு அதனையும் ஒரு உதாரணமாக கொள்ளலாம். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உருவாக்கிய பள்ளிக்கூடம். யாழ்ப்பாணத்தின் பெருமைமிக்க சைவத்தமிழ் கல்விக்கூடம். யாழ்ப்பாண வரலாற்றை சொல்லவிளைகின்றவர்கள் யாரும் அந்த சைவப்பிரகாச வித்தியாசாலையை மறுதலிக்க முடியாது என அதன் பெருமைகள் ஏராளம். ஆனால் நடைமுறையில் அந்த பெருமைகளுக்காகவே யாரும் தங்கள் பிள்ளைகளை அதில் கல்வி கற்க சேர்ப்பதில்லை. அதாவது நான் கல்விகற்ற காலத்தில் அப்படி. இப்போது அதன் நிலைமை இன்னும் பரிதாபம். நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போது இடையில் படித்துப்பார்த்த எனது அக்கா உதிரியாக இன்னுமொரு தகவலையும் சொல்லி வைத்துவிட்டுப்போனார். பிள்ளைகள் படிப்பில் அக்கறையில்லாமல் விளையாட்டுத்தனமான திரியும் போது “உங்களை கொண்டு போய் சைவப்பிரகாசத்தில் சேர்த்து விட்டுவிடுவன்“ என பல இடங்களில் பிள்ளைகள் அதட்டப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றனவாம்.

மாந்தர்கள் தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் கோடுகள் கல்விச்சாலைகள், கோயில்கள், வாசகசாலைகள் என எல்லாவற்றையும் தான் பிரித்துப்போடுகின்றது. அதற்கு நாவலர் பெருமானின் சைவப்பிரகாச வித்தியாசாலையும் விலக்கல்ல. எனவே சைவப்பிரகாச வித்தியாசாலை தாண்டி எனது தந்தை என்னை இந்து ஆரம்ப பாடசாலையில் சேர்த்ததற்கு அவர் எனது கல்வி மீது கொண்டிருந்த அதீத அக்கறை மட்டுமே ஒற்றைக்காரணம். இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்தாலும் அனுமதிப்பரீட்சையில் 3 புள்ளிகள் குறைவான காரணத்தால் எனது கனவு மெய்ப்படவில்லை. ஆனால் என்னிலும் குறைவான புள்ளிகள் பெற்ற நண்பர்கள் பலரும் பின்கதவால் பாடசாலைக்குள் நுழைந்துவிட்டிருந்தார்கள் என்பது வேறுகதை. இதற்காக நான் ஏதோ நேர்வழியில் மட்டுமே முயற்சித்ததாக யாரும் தப்பாக “பில்டப்“ கொடுக்கவேண்டியதில்லை. எங்களுக்கு அந்த பின்கதவுகளும் திறக்கப்படவில்லை என்பதுவே யதார்த்தம்.

படிக்கின்ற பிள்ளை எங்கு வேண்டுமானாலும் படிக்கும் என்பதாக சிலர் முணுமுணுப்பது எனக்கும் கேட்கின்றது. இவ்வாறான கோஷ‌ங்களில் சில காலம் நானும் மயங்கித் திரிந்திருக்கின்றேன். ஆனால் உண்மை அதுவல்ல. இன்றைய பதிவை நான் கந்தர்மடத்திலிருந்து ஆரம்பித்திருந்தாலும் நான் சொல்ல நினைப்பது நான் பார்த்த ஆசிரியர்களையும் கல்விச்சாலைகளையும் அவை மாணவ மனநிலைகளில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் பற்றித்தான்.

கற்றல்செயலும், கற்பித்தல்சேவையும் ஒன்றில் ஒன்று கைகோர்த்தபடி ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கியபடி முன்னேறும் இரு வேறு செயல்கள் என நான் விளங்கி வைத்திருக்கின்றேன். எப்படியென்றால் ஒன்றின் முழுமையின்றி மற்றையது முழுமை பெறாது. இன்னும் இலகு வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு நல்ல மாணாக்கனுக்கு ஒரு நல்ல ஆசிரியர் அமைவதும் ஒரு நல்ல ஆசிரியர்க்கு ஒரு நல்ல மாணாக்கன் அமைவதுவும் அபூர்வம். இங்கு நல்ல என்பதை அடிக்கோடிட்டு அழுத்தி வாசிக்கவும். அப்படி அமைந்து விடுகின்ற நல்ல புள்ளியொன்றிலிருந்தே சாதனைகள் தொடக்கம் பெறுகின்றன. அந்தப்புள்ளிகள் எனக்கும் எனக்கு வாய்த்த நல்லாசிரியர்களுக்கும் அமையவில்லை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

முன்னும் பின்னுமாக நிறைய ஆசிரியர்களை கண்டிருந்தாலும் எனது-ஆசிரியர்கள் என எண்ண விளைந்ததும் முதலில் நினைவுக்கு வருபவர் எனது நாலாம் ஆண்டு தமிழ் ஆசிரியர் வேலுப்பிள்ளை மாஸ்டர் தான். தமிழ் ஆசிரியர் என்றால் அவர் தமிழ் மட்டும் கற்பிப்பதில்லை. கணிதம், விவசாயம் சிலசமயங்களில் ஆங்கிலம் என அவர் பல அவதாரங்கள் எடுப்பார். ஆனால் அவரிடம் தமிழ் கற்றது மட்டும் இன்னமும் ஞாபகம். சொல்வதெழுதலின் போது எழுத்து பிழையின்றி எழுதுவதற்கு ஒரு நுட்பம் சொல்லித்தந்தார். “சொற்களை இணைக்கும் க், ச் போன்றவற்றை அழுத்தி உச்சரித்து வாசித்துப்பழகு! உனக்கு எழுத்துப்பிழை வராது” என அவர் சொன்ன நுட்பத்தை நான் பற்றிப்பிடித்துக்கொண்டேன். அதன் பிறகு வீட்டில் பொட்டலம் கட்டிவரும் பத்திரிகைகள், கிழித்துப்போட்ட காலண்டர் பக்கங்கள் என கண்டதிலெல்லாம் க் ச் தேடி அழுத்தி வாசித்துப் பழகினேன். இப்போதும் எனது சகோதரி அப்பாவுக்குச்சொன்னார் என எனது தமிழ் கற்றல் பற்றி கேலியாக நினைவு கூருவார். அதன் பிறகு தமிழ் என்பது எட்டுப்பாடங்களில் ஒன்றாக மட்டுமே எனக்கு இருந்தது. அதனை ஸ்ரான்லி கல்லூரியில் 10ம் வகுப்பில் ஒருவர் மாற்றியமைத்தார். அவர் செல்வரெத்தினம் மாஸ்டர். யாரோ ஒரு ஆசிரியர் வராத பாட இடைவெளியை நிரப்ப வந்தவர் எங்களுக்குள் தமிழ் நிரப்பிவிட்டு போனார். தமிழின் இலக்கணங்களை மட்டும் காட்டியே இதுவரையில் எம்மை மிரட்டி வைத்திருந்த மற்றைய தமிழ்ஆசிரியர்கள் போலல்லாமல் தமிழின் சுவையான பக்கங்களையும், குசும்புகளையும் அழகையும் அறிமுகப்படுத்தினார். அன்று அவர் மீது ஏற்பட்ட நல்லபிப்பிராயம் பின்னர் அவர் எங்களது வகுப்புக்கான ஆசிரியர் இல்லை என்றபோதும் பாடசாலை நிகழ்வுகள் விழாக்கள் என்பவற்றின் போது எம்மை அவரின் கீழ் ஒன்றிணைய வைத்தது. பின்னாட்களில் பாடசாலையில் பட்டிமன்றங்கள், விவாதங்களில் எங்களது பெயர் அடிபடுவதற்கு செல்வரெத்தினம் மாஸ்டர் மீது ஏற்பட்ட பற்றுதலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பின்னாட்களில் உயர்தரத்தில் தாவரவியல் கற்பித்த குணசீலன் ஆசிரியர் அவர்களையும் மறக்கவியலாது. ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களுக்கு வருவதே பணம் பண்ணும் ஒற்றை நோக்கத்திற்காகத் தான். அந்த தனியார் கல்விநிலையத்திலும் கட்டணம் செலுத்தமுடியாதவர்களுக்கு இலவசமாக அவர் கற்பித்தது அவர் பற்றிய உயர்வான எண்ணத்தை உருவாக்கியது. அதிலும் அதனை அவர் பண்ணிய விதம் சிறப்பானது. குறித்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் அவரைச் சந்தித்துக் கதைத்தோ, அல்லது வேறு படிவங்கள் பூர்த்தி செய்யவோ வேண்டியதில்லை. அலுவலகத்தில் தமது கட்டணம் செலுத்தும் அட்டையை ஒப்படைத்தால் அனைத்து மாணவர்களுக்கும் தாவரவியல் பாடத்திற்கு கட்டணம் செலுத்தப்பட்டதாக முத்திரைகுத்தி தரப்படும். இதனால் இலவசமாக கற்பவர்கள் என்னும் அடையாளம் யாருக்கும் தெரியவராது. ஆசிரியர் உட்பட. இதில் எத்தனை மாணவர்களும் பங்குபெறலாம். நான் பார்த்து வியந்த முதல் அப்பழுக்கற்ற சேவை அதுவாகத்தானிருக்கும்.

உண்மையில் ஒரு ஆசிரியர் மீது மாணவர்களுக்கு ஏற்படுகின்ற பற்றுதலே அந்தப்பாடத்தின் மீதான விருப்பமாகவும் பின்னர் அந்தப்பாடம் அல்லது துறையில் சாதிப்பதற்கான பொறியாக மாறுவதாக நான் விளங்கிக்கொண்டிருக்கின்றேன். சிறுவயதில் படித்த சுற்றாடல் கல்வி, சுகாதாரம் சமூகக்கல்வி போன்றன இன்றளவும் கசந்து கொண்டேயிருப்பதற்கு அதை கற்பித்தவர்கள் மீது எனக்கு ஏற்பட்ட “பிரியம்“ மும் காரணமாக இருக்குமோ என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இப்போதெல்லாம் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஏராளமான மாற்றங்களும் புதிய சிந்தனைகளும் உருவாகி விட்டன. மேலைத்தேய நாடுகளில் வாழும் எங்கள் பிள்ளைகளுக்கும் பாடசாலைகளுக்கும் இடையில் இருக்கும் உறவு என்பது எமக்கும் எங்கள் பாடசாலைகளுக்கும் இடையே இருந்த உறவு போன்று அவ்வளவு கசப்பானதாக இருப்பதில்லை. அவர்கள் யாரும் பாடசாலைகளை “கட்“ அடிப்பதற்கு எங்கள் அளவுக்கு காரணங்கள் தேடுவதாக நான் கண்டதில்லை.

போர்விமானம் சுற்றுவதாலோ பக்கத்து வீட்டு தாத்தா மண்டையை போடுவதாலோ அல்லது எனக்கே வருத்தம் வருவதாலோ பள்ளிக்கூடம் போகவேண்டியதில்லை என்பது எனக்குள் ஏற்படுத்திய சந்தோசம் போன்று எனது மகளுக்கும் இருப்பது போல் தெரியவில்லை. அதற்கு காரணம் ஆசிரிய-மாணவ உறவுகள் ஒருவித இயல்புநிலையில் அமைவதாக நான் கண்டிருக்கின்றேன். இங்கு ஆசிரியர்கள் என்பவர்கள் சட்டாம்பிள்ளைகளாக இருப்பதில்லை. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மட்டுமே அதியுச்ச பட்ச அறிவுத்திறன் கொண்டவராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆசிரியரே அனைத்தும் அறிந்தவர் போன்ற ஒரு தேவையற்ற சம்பிரதாயத்தை கடைப்பிடிக்க முனைவதன் விளைவே எமக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே எழுந்த இடைவெளியாக இருக்குமோ என நான் எண்ணுவதுமுண்டு.

நான் தகவல்-தொழில்நுட்பம் படித்த வகுப்புக்களில் நாம் கேட்கும் பல சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் பதில்களை எங்கிருந்து பெறலாம் எப்படி தேடிக் கண்டுபிடிக்கலாம் என்பதை மட்டுமே தருவார்கள். பல சமயங்களில் பதில்கள் அவர்களுக்கும் தெரிந்திருப்பதில்லை. இன்னும் சில சமயங்களில் மாணவர்களிடமிருந்தும் பதில்களை கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். இந்தவொரு இயல்புநிலை மாணவர்களை மேலும் மேலும் குறித்த துறை சார்ந்து ஈர்ப்புடன் இயங்க வைப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். இதற்காக ஆசிரியரை மாணவர்கள் யாரும் ஒண்டும் தெரியாதவராக எண்ணிவிடுவதில்லை.

பத்தாம் வகுப்பில் கணித-பாடத்திலும் பின்னர் உயர்தரத்தில் தாவரவியல் பாடத்திலும் ஆசிரியர்கள் பிழையானதை சொல்கிறார்கள் என்பதை நிரூபித்ததால் வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றேன். பாடசாலையில் இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாவரவியல் பாடநேரத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. அந்தப்பாட நேரத்தில் ஒழுங்காக இருந்து அந்த ஆசிரியையிடம் தொடர்ந்தும் கற்ற அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல் குறைந்தபட்ச புள்ளிகளைக் கூட பெறாமல் போனது குறித்த ஆசிரியையின் திறமைக்கு சான்றாகலாம்.

இங்கே தகவல்-தொழில்நுட்ப வகுப்புகளிலும் எனது குசும்புச் சேட்டைகள் மாறவில்லை. சரியானதற்காக ஒரு புதிய விடயத்திற்காக ஆசிரியர்களுடன் கருத்தாடும் குணம் மறையவில்லை. ஆனால் அதிசயமாக இங்கே நான் வகுப்பை விட்டு வெளியேற்றப்படவில்லை. மாறாக ஆசிரியர்களால் ஊக்குவிக்கப்பட்டேன். இதனால் குறித்த பாடம் தொடர்பான பற்றுதல்கள் என்னை தொற்றிக்கொள்கின்றன.

இப்போது எனக்குள் தோன்றுவதெல்லாம் ஒன்றுதான். எல்லா தவறுகளும் எங்கோ ஒற்றைப்புள்ளியில் தான் மையம் கொள்கின்றன.

******************************************************************************************************

ஆருத்ராவின் சிறு கருத்தாடல்.

எங்களுக்கும் யாழ் பாடசாலைகளில் படிப்பதான கனவுகள் இருந்திருக்கின்றன. கூரையேறி கோழி பி‌டிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுந்தம் போக முடியாததான வாழ்வியல் யதார்த்தம் ஆசைகளை அணையிட்டு தடுத்திருக்கின்றது.

எங்கள் சிறுவயதில் எங்களுக்கு கற்பித்தவர்கள் ஆசிரியர்கள் அல்ல- RING MASTERS. அவர்களின் சினம் கொண்ட விளாசல்களை பலதடவை பின்பக்கத்தில் ‌ ஏற்றிருக்கின்றேன். ஆருத்ராவிற்கு ஒரே ஒரு கனவுதான் நிறைவேறாமல் போனது. ஆருத்ரா M.B.B.S( Cey) B.H.C.H (Lon) என படித்து, அழகான பெண்களின் கைபற்றி, நாடித்துடிப்பறிந்து “ஆ” காட்டச் சொல்லி சிறப்பாக வைத்தியம் பார்க்க முடியாமல் போன முதிர் பருவத்து கனவு பாக்கி இருக்கின்றது. எங்கிருந்‌தோ ஒரு அசரீரி கேட்கின்றது. “நீ உருப்படவே மாட்டியா?”

ஆருத்ரா எழுதியவை | ஒக்ரோபர் 22, 2012

இரயில் பயணங்கள்.

ரயில் பயணம் நீண்டு கொண்டே செல்கின்றது. இறுதி தரிப்பிடம் பற்றிய பிரக்ஞை எல்லோருக்கும் தெரியும். எனினும் எந்த நேரத்தில் அவ்விடத்தை அடைவோம்? என யாருக்கும் தெரிவதில்லை. அதுவரை நீண்ட தொலைதூரப்பயணம். சென்றாக வேண்டும். நீண்டு செல்லும் இரயில் பயணங்கள் பசுமை நிறைந்த வயல்வெளிகளூடாகவும், சலசலத்து ஓடும் சிற்றாறை மேவியும், வறண்டு வெடித்த தரிசு நிலத்திற்கூடாகவும் என இரசனையான பயணம்.

பயணம் அலுப்பில்லாமல் சுவாரஸ்யம் நிறைந்ததாய் ஆக்குவதற்கு ஒவ்வொரு நிறுத்தத்திலும் சிலர் இறங்க, சிலர் ஏறிக்கொள்கிறார்கள்.தொண்டுக்கிழம், இளைஞர்கள், யுவதிகள், கன்னகுழி விழச் சிரிக்கும் குழந்தைகள் என வயது வேறுபாடு, வசதி வேறுபாடு நிறைந்த பயணிகள் கூட்டம் சிரித்தும், சந்தோஷித்தும், மௌனித்தும், கூக்குரலிட்டும் கலந்துகட்டிய உணர்ச்சிக் குவியலாய் அரக்கப் பரக்க விரைவது காலை நேர ரயில் பயணங்களில் காணக்கிடைக்கின்ற ஒன்று தான்.

எனக்கும் கடந்த இரண்டு மாதமாக இரயில் பிரயாணம் வாய்த்திருக்கின்றது. மேற் பராக்களில் நான் விபரித்தது வாழ்க்கைப் பயணம். ஓவ்வொரு நாளின் காலையிலும் 9.39 க்கு ரயில் பிடித்து 16 கி.மீ தூரம் பயணம். 21 நிமிட விரைவுப்பயணத்தில் வேலைக்கு சென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளைவது எனினும் நன்றாகவே உள்ளது.

பயணத் தூரத்தின் இடையில் சூரிச் விமான நிலையத்தை கடந்து செல்கின்றது இரயில் பயணம். இரயிலின் விரைவுப்பயணத்திற்கு இடையில் தலைதட்டும், தரைதட்டும் – மேலெழுவதும் கீழிறங்குவதுமாக விமானங்கள் விரைகின்றன. பயணங்கள் முடிவதில்லை. இங்கே அவசர கதியில் நடந்தேறுகின்ற அசைவற்ற இரயில் பிரயாணங்களைக் காட்டிலும் சாவகச்சேரி-கொழும்பு இரயில் பிரயாணங்கள் ஆடி அசைந்து, தடதடத்து பெருங்குரலெழுப்பி விரைவது கடந்த காலத்தின் மகிழ்ச்சிக் ‌கோலங்கள்.

எனது முதலாம் இரண்டாம் வகுப்பு பள்ளிக் காலங்கள் மாதம்பை என்ற சிறுநகரிலிருந்து சிலாபம் வரையான 10 மைல் பிரயாணம் இரயில் பிரயாணமாகவே இருந்திருக்கின்றது. சிலாபம் ST.BENADETTE பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். மாதம்பை என்ற தனித்த பெரும்பான்மை சமூகம் வாழ்ந்த இடத்தில் சிறுவயதுப் பராயம் நண்பர்களின்றி , விளையாட வேறு துணையின்றி, பின்னேரப் பொழுதுகளில் தங்கையையும் அழைத்துக்கொண்டு இரயில் நிலைய மேடையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாக இருந்திருக்கின்றது. இரயிலில் பயணிப்பதும், இரயில் நிலைய மேடையில் இருந்து கொண்டு ரயில் பார்ப்பதும் இனிமை நிறைந்த பொழுதுபோக்குகள். மாதம்பையில் எனக்கு இருந்த ஒரே பொழுது போக்கிடம் இரயில் நிலையம் தான்.

அதே போன்றதுதான் பின்னாட்களில் கொழும்பு செல்வதற்காக சாவகச்சேரி இரயில் நிலைய மேடையில் காத்திருக்கின்ற பொழுதுகளில் தனங்கிளப்பு வயற்காற்று வீசும் பாருங்கள். நான் புதிதாய் பிறந்தெழுவேன். நீடித்த இரயில் பயணத்தில் இரவுப் பொழுதில் சங்கத்தானை இரயில் நிலையம் கடந்து யாருமற்ற மோனத்தில் உறைந்திருக்கும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியை தாண்டுகையில் என் உயிருக்குயிரான உறவைத் தொலைத்ததை ஒத்த துன்பம் அடைவேன். என்னளவில் உயர்திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் சிறுவயதில் தொலைத்தவன். பிரிவுத்துயரம் தாங்கிக் கொள்ளமுடியாதது. துருப்பிடித்த சைக்கிளில் வைத்திருந்த பாசத்தை போன்றதே உயிர்த்துடிப்பான மாந்தர்களிடத்தில் வைத்திருந்தது என ஒப்புவமை கூறமுடியும். எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. மனிதருக்கு மனிதர் உணர்ச்சித் திறனில், உணர்வுத்திறனில் கனிவாயும், கல்லாயும் இருந்து விட்டுப்போகின்றார்கள்.

சிலாபம் ST:BENADETTE பள்ளியில் படித்த காலத்தில் எனது வகுப்பாசிரியர் “மெனி” மாஸ்டர். மாதம்பையை விட்டு நீங்கி இலகுவாக நான் கல்வியை தொடர்வதற்காக சிலாபம் அளுத்வத்தையில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். மெனி மாஸ்டர் எங்கள் வீடு கடந்தே பாடசாலை சென்றாக வேண்டிய பொழுதில் வீட்டு வாசலில் புத்தகப்பையுடன் காத்திருக்கும் என்னையும் தனது சைக்கிளில் ஏற்றி பாடசாலைக்கு கூட்டிச் செல்வார். வகுப்பாசிரியருடன் கூடவே பாடசாலை செல்வதனால் மற்ற மாணவர்கள் என்மீது பயம் கலந்த மரியாதை வைத்திருந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை தெதுறுஓயா ஆற்றில் குளித்ததும், பின்மாலை நேரங்களில் லக்ஷ்மி தியேட்டரில் படம் பார்த்ததும் பசுமை நினைவுகள். பெரும் தென்னந்தோட்டம் ஒன்றின் மத்தியில் அமைந்திருந்த லக்ஷ்மி தியேட்டர் இப்போது இல்லை. அரைவட்ட வடிவிலான சாகாரா தியேட்டரும் இப்போதிருக்கின்றதா? தெரியாது. லக்ஷ்மி தியேட்டரில் எஸ்வி..ரங்கராவ் நடித்திருந்த, பின்னணியில் கண்டசாலாவின் குரலில் துன்பம் ததும்பும் “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக” பாடல் இடம்பெற்ற “அன்புச்சகோதர்கள்” படம் பார்த்தது மறக்க முடியாத நினைவுகள்.

இரண்டாம் வகுப்புடன் சிலாபம் ST.BENADETTE பள்ளி வாழ்க்கை முடித்து சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இணைந்ததும், அழகரத்தினம் ரீச்சர் எனக்கு வகுப்பாசிரியையாக அமைந்ததும், இரண்டாம் வகுப்பில் -திருக்குறளை யார் எழுதினார்? என்ற விடைதெரியாத வினாவிற்று முருகனே எழுதியதாக எழுதியதிற்கு அழகரத்தினம் ஆசிரியை எனது தந்தையாரிடம் சொல்லி சிரித்ததும் நினைவடுக்கில் நெருக்கமாக உள்ளது.

பின்பாக எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் சிலாபம் சென்ற பொழுதில் மெனிமாஸ்டரை பாரக்க ஆசைப்பட்டு தந்தையாரிடம் கேட்டு அவர் வீட்டிற்கு சென்ற போதில் மெனிமாஸ்டர் அன்பு மிகுதியில் என்னை கட்டி அணைத்துக் கொண்டார். என் கண்களில் கர கர கண்ணீர்.

இப்படித்தான் வந்தமைகின்றன, இரயில் பயணங்களின் போது சந்தித்து சிறிது நேரம் அளவளாவி சந்தோஷித்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் போய்விடுகின்றவர்களை பின்னாட்களில் நாம் விருப்பப்பட்டாலும் காணமுடிவதில்லை. இறங்கிப்போய்விடுகின்றார்கள் மனிதர்கள் மனதினின்றும். சிலருடன் குறுகிய தூர பயண அமைவும், சிலருடன் நீண்ட தூர பயண அமைவும் வாய்த்து விடுகின்ற தருணங்களில் சிலருடனான பேச்சு சுவாரஸ்யம் இவர்கள் வழி நெடுக எங்களுடன் பயணிக்கமாட்டார்களா? என்று ஏங்க வைத்திருக்கின்றன.உற்சாக மனிதர்களிடத்தே அவர்களைச் சுற்று ஒரு ஈர்ப்பு வட்டம் இணைந்திருப்பதாகவும் அது அவர்களுடன் கூட இருப்பவர்களையும் பற்றி சந்தோசம் கொள்ளச் செய்வதாயும் கணித்திருக்கின்றார்கள். அவ்வாறான நபர்களுடன் தொடர;ந்திருக்க பிரியப்படுவீர்கள். இலகுவாக நட்புப்பாராட்டிக் கொள்ளும் “டேய்” என்ற அடைமொழியுடன் விளித்துக்கொள்ளும், மரியாதை நிமித்தம் “நீங்கள்” என்று விளிக்காமல்- “நீ” என விளிக்கும் எல்லா நண்பர்களும்,நண்பிகளும் பிடித்தமானவர்கள்.

தடதடத்து ஓடும் இரயில் பயணத்தில் பச்சைப்பசேல் வயல்வெளிகள், சலசலத்து ஓடும் ஆறுகள், வறண்டு காய்ந்த தரிசுநிலங்கள் எல்லாவற்றையும் கற்பனையில் கொண்டு வந்து துன்பம், இன்பம், எழுச்சி, துவள்தல், சிரிப்பொலி, விசும்பல் என மனநிலை மாறுபாடுகளுடன் தொடர்ந்தியங்கும் வாழ்க்கையை பொருத்திப் பாருங்கள். உண்மையில் நொந்து விடுவீர்கள்.

இரயிலில் ஏறி எங்களுடன் உட்கார்ந்து பயணித்து அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி விடுகின்றவர்களான – எங்கே போனார்கள்? எங்கே இருக்கின்றார்கள்? என்றே தெரியாத எண்ணற்றவர்களை நாமும் வாழ்க்கை பயணத்தில் தொலைத்திருக்கின்றோம். அவர்களை எப்போதாவது திரும்பிப் பார்க்க முடியுமா? அவர்களுடன் அளவளாவி கூடிக் குதூகலித்திருக்க முடியுமா? என்றெல்லாம் எல்லோரும் ஏக்கப்படுவதைப் போன்றே எனக்கும் துயரப்படிமங்கள் நிறைந்துள்ளன.

சாவகச்சேரிஇந்துக்கல்லூரியின் TV HALL என்றழைக்கப்படுகின்ற மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து “லைசியம்” என்ற பெயரில் வாரத்தின் ஒரு நாளில் மாணவர்கள் அரங்கேறுகின்ற பொழுதில் ஒரு குட்டி தேவதை பாடி விட்டுப்போன “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடலை …. அவ்விசையை இனி எங்கு போய்க் கேட்பேன்? அவ்வாறான பொழுதொன்றை என்னால் தரிசிக்க முடியுமா? கண்ணால் கசிந்து கொள்ளத்தான் முடியும். இரயில் சிநேகிதங்களா நம் நட்புகள்?

பின்னேரப் பொழுதுகளில் சாவகச்சேரி நூலக வளாகத்தின் முற்பரப்பில் இணைந்து, அளவளாவி மகிழ்ந்த நண்பர்கள் எங்கெங்கோ உலகின் அனைத்து பாகங்களுக்கும் தூக்கி வீசப்பட்டு உரையாட நேரமில்லாமல் ஓடி ஒளிகின்ற காலங்கள் எங்களுக்கு அவலமாக வாய்த்திருக்கின்றது.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொள்ள கற்றுக்கொண்டவர்களால், இரயில் சிநேகித அனுபவங்களை இலகுவாக வலியின்றி கடந்து கொள்ள முடியும். நினைவின் நெகிழ்வுகளை உட்சுமந்து தினம் தினம் நினைவுறுத்தி கண்ணால் கசிந்து கொள்பவர்களுக்கு எங்கள் 82ம் வருடத்து தனியார் கல்வி நிலைய மாணவ குழாமும், கச்சேரியில் வேலை பார்த்துவிட்டு ஓடி வந்து வகுப்பெடுக்கும் அந்த ஆசிரியரும், அதே தனியார் கல்வி நிலையத்தில் கணிதம் கற்பித்து சிலபல வேளைகளில் நட்பு பாராட்டி அரவணைத்த சோதிலிங்கம் மாஸ்டரும், சிறுவயதில் “சொற்றுணை வேதியனை” உறுப்பமைய எழுதிக் கொள்ள கற்பித்த அழகரத்தினம் ஆசிரியையும், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” இசைத்த குட்டி தேவதையும் மறக்க இயலாமல் தவிக்க வைப்பவர்களில் என் மனக்கண்ணில் நிற்பவர்கள்.

நான் இப்போதெல்லாம் இறைவனை வேண்டுவது

பிறர்வாட பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதர்கள் நிறைந்த

இம்மானிட வாழ்வில் “இனி என்னை புதிய உயிராக்கி, மதி தன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்” என்பதே.

பாடல்களை  கேட்க  பாடல்களின்  இணைப்பை அழுத்துங்கள்.

********************************************************************************************

இந்த பதிவு குறித்த நாக.தயாகரனின் விமர்சனம்

இது வெறும் இரயில் பயணத்தை குறிக்கும் பதிவு அல்ல என்பதும் இரயில் பயணத்தை படிமமாக்கி ஆருத்ரா எதையோ சொல்ல விளைகின்றார் என்பதும் ஆரம்ப பந்தியிலேயே புரிந்து போனது. மூன்றாம் பந்தியில் அதனை அவரே உறுதிசெய்கின்றார்.

ஒரு அழகிய கவிதை போல இரயில் பயணத்தின் மூலம் தனது வாழ்க்கையின் பட்டறிவை பதிவாக்கியிருக்கும் அழகு தனிச்சிறப்பு. மேலும் தொடர்ச்சியாக விடாமுயற்சியுடன் பதிவு-எழுதும் ஆருத்ரா வின் உழைப்பு போற்றப்பட வேண்டியதே.

பயணங்களில் கடந்து போனவர்களை நினைத்து நெகிழ்வதும், உருகுவதும் சிறந்த உணர்வுத்திறன் தான். இருந்த போதும் பயணத்தின் நிகழ்காலத்தில் நம்முடன் கூட இருப்பவர்களை கவனிக்காது விட்டுவிடக்கூடிய விபத்தும் நிகழ்ந்துவிடவும் வாய்ப்புள்ளது. இறங்குபவர்களையும் இறங்க நினைப்பவர்களையும் மகிழ்வுடன் வழியனுப்பி வைக்கவும், ஏறி வர நினைப்பவர்களையும், கூட வருபவர்களையும் அரவணைத்து செல்வதாகவும் மட்டுமே வாழ்க்கை தரப்பட்டிருக்கின்றது. இதில் விபத்துகளின்றி பயணத்தை கொண்டு செலுத்தும் வல்லமை பெற்றோர் பெரியோர்.

இது ஆருத்ரா எழுதியதற்கு எதிர்க்கருத்து   அல்ல. பொதுவாக   நிகழ்ந்து விடுகின்ற விபத்தைப் பற்றி சொல்லவந்தேன்.மற்றும்படி   ஆருத்ரா வின் பதிவு எப்போதும் போன்றே அருமை. தொடர்ந்தும் பதிவிடுங்கள்.

ஆருத்ராவின் விளக்கம்.

தயா! விபத்துக்கள் கவனப் பிரகாரம் விளைவதில்லை. கவலைப் பிரகாரம் விளைபவை.என்னைத்  துாக்கி  வைத்து   “தொப்பென்று”   கீழே   போட்டதற்கு  நன்றி. இது  “அவலை  நினைத்து  உரலை  இடித்த  கதை” அல்ல. அவளை நினைத்து  உணர்வைப் படைத்த  கதை.

ஆருத்ரா எழுதியவை | ஒக்ரோபர் 13, 2012

சங்கப் பலகை.

பறவைகள் எவையும் தங்களுக்கென “பாஸ்போர்ட்” வைத்துக் கொண்டிருப்பதில்லை. அவற்றிற்கு “அடையாள அட்டை” என்ற ஒன்று கிடையாது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்திற்கு பறந்து செல்வதற்கு கட்டற்ற சுதந்திரம் அவைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் விமானப் பிரயாணம் பெரும் அலுப்பூட்டுவதாக மாறியுள்ளது. இங்கேயுள்ள விமான நிலையங்களில் எல்லாவற்றையும் அவிழ்த்துக் காட்டவேண்டியுள்ளது. அதைப் பார்ப்பதற்கோ, இவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள் என்று பெரும் வியப்பு எனக்கு. கொண்டு போகும் பைகள், மருந்துப்பொருட்கள், அலங்காரப்பொருட்கள் எல்வாவற்றையும் தோண்டித்துருவி ஆராய்ந்து 1.கொண்டு செல்லலாம் 2.கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற இரு பிரிவில் பிரித்து, கொண்டுபோக அனுமதியில்லாதற்றை அங்கேயே போட்டுச்செல்ல குப்பைத்தொட்டியொன்றும் காணப்படும் விமான நிலையங்களை காண்கையில்

கணியன் பூங்குன்றானாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடல் நினைவுக்கு வருகின்றது. உலகத்தையே ஒரே ஊராகவும் உலக மக்களை நண்பர்களாகவும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் பாடப்பட்ட இந்தப்பாடல் புறநானூற்றில் 192 வது பாடல். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நினைப்பிருந்தால், உலகில் போரற்ற சமாதான வாழ்வு கிட்டியிருக்கும். சானல் 4 தமிழர்களுக்கு தெரியாது போயிருந்திருக்கும். விமான நிலையங்களில் யாரும் எதையும் அவிழ்த்துக்காட்ட வேண்டிய தேவையிருக்காது. ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களை விட பிரயாணத்திற்கான இணைப்பு (TRANSIT) விமான நிலையங்களான DUBAI லும் QATAR லும் காலணி, இடுப்புப்பட்டி எல்லாவற்றையும் கழற்றி வைத்து பரதேசியாகும் பயண கைங்கர்யம் பெரும் கெடுபிடி எதேச்சாதிகாரம். அதே பாடலின் மீதி வரிகளைப் பார்க்கலாம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!
பெரியோரை வியத்தலும் இலமெ!
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!

உங்களுக்கான கஸ்ட சூழ்நிலைகள் உங்களாலேயே ஏற்படுத்தப்பட்டவை. உங்களுக்கு யாரும் துன்பத்தை பரிசளிக்கவில்‌லை. முடிந்த வரை ஏதேதோ தருணங்களில் எப்போதோ விட்ட பிழைகளும், தொட்ட குறைகளும் தான் உங்கள் காலைகள் அழகாக விடியாமல் போனதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

உங்களுக்கு கிடைத்த நல்லன எல்லாவற்றிற்கும் பொறுப்பெடுத்துக்கொண்ட நீங்கள், தீயவற்றிற்கு பொறுப்பாக மற்றவர்களை சுட்டிக்காட்டுதல் எவ்வகையிலான நியாயம்? என்பதை கணியன் பூங்குன்றனார் அழகாகப் பாடி வைத்துள்ளார்.

இவர் பெரியவர் என்று யாரையும் பார்த்து வியத்தல் வேண்டேன். இவர் சிறியர் என இவரை இகழவும் போகேன். ஓடும் செம்பொன்னையும் ஒன்றாகப் பார்க்கும் ஒப்புரவான வரிகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதீயம் எல்லாவற்றையும் உடைத்துப்போடும் கணியன் பூங்குன்றனாரை கார்ல்-மார்க்ஸ், எங்கெல்ஸ் ற்கு முற்பட்ட மக்கள் நலம் பேணிய சிந்த‌னையாளராக காண்கிறேன். நவீன கருத்தியலுக்கு முற்பட்ட பாரிய சிந்தனைத் தளம் சங்க காலத்தில் இருந்திருக்கின்றது என்பதற்கு இதைத்தவிர வேறென்ன ஆதாரம் வேண்டும்.

சங்க இலக்கியம் என்பது தமிழின் மிகப்பெரும் கடல். இதில் விழுந்தெழுந்து வியப்புக்கொள்வதற்கு 2381 பாடல்கள் 473 புலவர்களால் பாடப்பட்டவை. 473 புலவர்கள் என்றவுடன் இவர்களை பாடல் பாடி பொழுதைக்கழித்தவர்களாக எண்ணிக் கொள்ளத் தேவையில்லை. அரசர்கள், போர்வீரர்கள், விவசாயி, சிற்பி, கடற்தொழிலாளி என பல்வேறு தரப்பினரின் வீரம், காதல், அன்பு என மலர்ந்திருக்கின்றது சங்க இலக்கியம்.

சங்ககாலம் கி.மு 500 – கி.பி 300 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியது. பெரும்பாலான பாடல்களில் பாடியவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. பாடலின் வரிகளாலேயே அவர்களின் பெயர்கள் அழைக்கப்படுகின்றன.

18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழிற்கு அச்சு இயந்திரங்களின் வருகையும் உ.வே.சாமிநாதையர் ஆறுமுகநாவலர் போன்றவர்களின் பெரும் முயற்சியும் காரணமாக ஏட்டில் கிடந்தவைகள் ஏணி ஏறி அச்சுப்பரப்புக்களை அடைந்து கொண்டன. மிகத்தரமான உலகஇலக்கியம் சங்க இலக்கியமாக எமக்கு கிடைத்தது.

மனித மாண்பு குறித்த கணியன் பூங்குன்றனாரின் பாடலைப்போலவே காதலைப்பாடிய செம்புலப்பெயனீரார் பாடல் எல்லாத்தரப்பினராலும் எடுத்தியம்பப்படுவது. சொல்லாட்சி மிகுந்தது.

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழியறிதும்
செம் புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.

-செம்புலப்பெயனீரார்-

my mom and your mom
how are they related?
my dad and your dad, 
how are they friends?
me and you,
how did we know each other?
nevermind, but now,
like the pouring rain and the red earth,
our loving hearts are dissolved together.

(Kuruntokai – 40)

“இருவர் “படத்தில்  மேற்கண்ட வரிகளை கேட்க  இங்‌கே  அழுத்துக.

எனக்கு உன்னை முன்பே தெரியாது. எனது தந்தையும் உனது தந்தையும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் இதற்கு முன்னமே வேறு வழியில் தொடர்புகள் அற்றவர்கள். இருப்பினும் எமது அன்பினால் செம்புலத்தில் விழுந்த நீரைப்போலே இணைபிரியாதவர்களாக கலந்திருப்போம்.

காதல் என்பது பரந்த அன்பின் அடையாளம். நல்லன எல்லாவற்றையும் உண்மையான காதல்தான் கற்றுத்தந்திருக்கின்றது. அழவும் சிரிக்கவும் கற்றுத்தருகின்ற காதல் நீண்டகனவொன்றின் காலடிகளைப்பற்றி நடந்ததாக “உயிர்மேவும் காதல்” காலாகாலத்திற்கும் இசைக்கப்படுகின்றது.

நவயுகக்காதல் எப்படிப்பட்டது? என கவிஞர் மீ.ரா செம்புலப்பெயனீராரின் வரிகளில் கவிபுனைந்திருக்கின்றார். நகைச்சுவையும் ஏளனமும் தொனிக்கும் கவிதை கீழே தரப்படுகின்றது.

உ னக்கும் எனக்கும் ஓரே ஊர்
வாசுதேவ நல்லூர்.
நீயும் நானும் ஒரேகுலம்
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்.
உன் தந்தையும் என் தந்தையும் உறவினர்கள்
மைத்துனர்மார்.
செம்புலப்பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே.

சீதனமாக அழகான வீடும், இலட்சக்கணக்கான ரூபாய்களும், வன்னியில் வயற்காணியும் தந்ததனாலே செம்புலப்பெயனீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலந்ததாக எமது நாட்டிற்கேற்ற விதமாக நாமும் இக்கவிதையை வரைந்து கொள்ளலாம்.

பாண்டிய மன்னனிடம் பரிசு பெறுவதற்காக இறைவனரால் பாடப்பட்ட சங்கஇலக்கியப் பாடலொன்றையே தருமி எடுத்துச் செல்கின்றார். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா? அன்றில் வாசனைத்திரவியங்கள் பூக்கள் சூடிக்கொள்வதனால் பெறப்படுகின்ற செயற்கை வாசனையா? என்ற பெரும் சந்தேகம் பாண்டிய மன்னரால் ஏற்படுத்தப்பட்டு சங்கம் வளர்த்த மதுரையிலே நக்கீரன் தலைமையிலே கவி-விவாதம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

தருமியாக நாகேஷ் செல்வதும் அவமானப்பட்டு புலம்புவதும் முக்கண் முதல்வோன் சிவனாக சிவாஜிகணேசன் தருமியை அழைத்து செல்வதும் பெரும் சர்ச்சை கிளம்புவதும் நீங்கள் திருவிளையாடல் படத்தில் கண்டு களித்தவை. அதில் பாடப்படுகின்ற பாடலான…..

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

திருவிளையாடல் விவாதம் காண   இங்‌கே  அழுத்துக.

என்ற பாடல் மலர்களில் மகரந்தங்களை எடுத்துண்ணும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! பல பிறவிகளில் நட்புடன் பழகும் அழகிய பல்வரிசை கொண்ட என்னவளின் கூந்தலை விட, நீ அறிந்த பூக்களில் வேறேதும் மணமுடையதுண்டா கூறு? நீ எனக்காகச் சொல்ல வேண்டாம். நீ கற்றறிந்ததை கூறு? என்பதாக பொருள் கொள்ளப்படும் இந்தப்பாடல் மிக அழகான உவமான உவமேயங்களை சிறப்பான கருத்தாடலுடன் கொண்டு பெரும் விவாதப்பரப்பை விதைத்துச் செல்கின்றது.

சங்கப்பாடலான “கொங்குதேர் அஞ்சிறைத்தும்பி” காட்சிப்படுத்தப்பட்டதனால் “சங்கஇலக்கியம்” என்று தெரியாமலே சினிமா பாடல் வரிகள் போல பெரும் ஜனரஞ்சக அந்தஸ்தை பெற்று விட்டது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இந்தப் பாடல் காரணமாக ஏற்பட்ட பெரும் விவாதம் சிவன் நக்கீரனிடம் சாதி குறித்து சர்ச்சையான கருத்தை முன்வைக்கின்றார்.

அங்கம் புழுதிபட அரிவாளின் நெய்பூசி
பங்கம் படவறண்டு கால் பரப்பி
சங்கதனை கீர் கீர் என அறுக்கும்
நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து
சொல்லத் தக்கவன்?

மிகவும் கீழ்சாதியைச் சேர்ந்த நீயா என்பாட்டில் பிழை கண்டபிடிப்பது என சிவன் கோபமாக கேட்க நக்கீரன் சொன்ன பதில்

சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரானர்க் கேது குலம்?
சங்கை அரிந்துண்டு வாழ்வோம்.
உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.

நானாவது சங்கை அறுத்து மாலை செய்து விற்றுப்பிழைத்து வாழும் சாதியைச் சேர்ந்தவன். நீரோ பிச்சையெடுத்து வாழ்பவர் என வார்த்தைகள் வெப்பத்தில் வெடித்து பரம்புகின்றன.

“நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே”

சங்க இலக்கியம் சாகாவரம் பெற்ற இலக்கியம். 2371 பாடல்களிலும் காதல், வீரம், பிரிவுத்துயர் அழகாகப்பதிவில் இடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் காதல் கண்ணீர் வடிக்கின்றது.

« Newer Posts - Older Posts »

பிரிவுகள்