இதுதான் என் வீடு
சொல்லிக் கொள்ள மட்டுமே
முடிகின்றது.
எச்சங்கள் தான்
சரிந்து கிடக்கின்றன.
கிணற்றடியில் நின்ற
நீலப்பூங்கொடி
பற்றையாக வளர்ந்து கிடக்கின்றது.
வரிசையாக நீருற்றி வளர்க்கப்பட்டதில்
ஒற்றைக் குரோட்டன்
எஞ்சியுள்ளது.
உடைந்து சிதைந்த
வீட்டின் தாழ்வாரத்தில்
உட்கார்ந்து
வீதி பார்க்க முடிகின்றது.
கிணற்றுச் சுவரும்
குளிக்கும் அறையும்
சிதிலமாகி கிடக்கின்றன.
வளவின் மூலையில் இருந்த
முருக்கமரம்
முறிந்தபடி பூத்து கிடந்தது.
மாமரம் குப்பைகளால்
சொரிந்து காற்றாடி இருந்தது.
தனித்து நிற்கும் பொழுதுகள்
தவிக்கின்ற பொழுதுகளாயின.
வீதியில் செல்கின்ற
கல்லூரி சீருடை தரித்தவர்கள்
உன்னைப் போன்றே
தென்படுகின்றனர்.
உற்றுப் பார்த்தால்
வெறுமை சூழ்கின்றது.
நான் உயிர்வாழ
உணவும் நீரும்
உன்னுடைய நினைவுகளும் போதும்.
நினைவுத் திறன் மாத்திரம்தான்
என்னுடன்.
நீயில்லை!!நீயில்லை!!! .
முப்பது வருடங்களுக்கு
முந்திய பொழுதுகள் திரும்பாதா?
வாழ்ந்த எச்சங்களும்
வாழா மிச்சங்களும்
சுவைத்து
இனி ஈடேற வேண்டும்.
வீதி வழியே
கனவுகள் கானல் நீராக!!
சாவகச்சேரி 21.02.2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மறுமொழியொன்றை இடுங்கள்