மே மாதம் 31 ம்திகதி, சூரிச் பல்கலைக்கழக வைத்தியசாலை.
அக்காளைப் பெண் பார்க்க வந்து தங்கையை திருமணம் செய்ததாகி விட்டது என் நிலைமை.சொல்லுவதற்கு இந்த உவமானம் தான் வேண்டியிருக்கின்றது. எனக்கு அக்காளும் தங்கையும் சந்தோசத்தை அள்ளித் தந்து விடவில்லை என்பதே யதார்த்தம்.
ஒன்றரை மாதங்களுக்கு முன்னர்தான் இந்த வைத்தியசாலைப் பக்கம் வரவேண்டியதாகப் போய்விட்டது.இதற்கு முன்னர் பலதடவை வந்திருக்கின்றேன்.எனது இரு பெண்பிள்ளைகளும் இதே வைத்தியசாலையில்தான் பிறந்தார்கள்.மனைவியும் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு ஏழுநாட்கள் இங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.அப்போதெல்லாம் பார்வையாளர் நேரத்திற்குள் வந்து செல்லும் பாக்கியம் தான் கிடைத்ததே தவிர இங்கே படுத்துக்கிடக்கும் தேவை ஏற்படவில்லை.
சில உபத்திரவமான வலிகள் மறக்க முடியாதவைகளாக அமைந்து விடுவதுண்டு.ஒருமாலை நேரத்தில் ஆரம்பித்து… நடு இரவு வரை தொடர்ந்து…. எதற்காக எங்கே வலிக்கின்றது என்று தெரியாமல் மிகப் பெரிய அவஸ்தைப்பட்டு, இனி வீட்டில் நிற்காமல் வைத்தியசாலைக்குத்தான் போக வேண்டும் என நினைத்து, போன வேளையில் இருந்து இந்த வைத்தியசாலையுடனான பந்தம் தொடர்கின்றது.
அதே நாளில் அவசரசிகிச்சை மையத்தில் என்னை இறக்கிவிட்டு காரைப் பார்க் பண்ணப் போய்விட்ட மனைவி, வைத்தியசாலை நுழைவுக்குள் நிரப்பப்படவேண்டிய காகிதங்களை நீட்டிய தாதி, தாங்கமுடியாத வேதனையுடன் இவற்றை எதிர் கொண்ட நான் என மூன்று கதாபாத்திரங்களுடன் ஆரம்பித்து இன்றைய பொழுதில் அறுவை சிகிச்சை டாக்டர், அவருக்கு உதவியான அடிக்கடி வெட்கப்பட்டு சிரிக்கும் அழகான பெண்டாக்டர், எஞ்சிய அழகான தாதிகள் என பல்தேசிய கதாபாத்திரமாகிவிட்டது என் வாழ்க்கை.
அக்காள் – தங்கை என்ற முதல் உவமானத்தை விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.வந்த முதல் நாளில் எனது சிறுநீரகத்தில் 6 மி.மீ கல் சிறுநீரககுழாயில் அடைப்பை ஏற்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது.அப்பொழுதுதான் எனக்கு குடலிறக்கம் ஆரம்பநிலையில் இருப்பதும் தெரிந்தது.அக்காள் சிறுநீரககக்கல்.சிகிச்சை ஏதும் தேவையின்றி தானாக கரைந்து வெளியேறிவிட்டது.தங்கை குடலிறக்கம் கட்டி அழவேண்டி இருக்கின்றது.அப்படியும் சொல்ல முடியாது ; நேற்றைய பொழுதில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிட்டார்கள்.
பெரிய அறுவைச் சிகிச்சை என்று சொல்ல முடியாதுதான் எனினும் அடிவயிற்றில் இரண்டு பக்கமும் ஆறு சென்டிமீட்டர் நீளத்திற்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இதைத்தான் அடிமடியில் கைவைக்கின்றது என்கிறார்களோ..?
நான் இந்த வைத்தியசாலைக்கு வந்ததின் பின்னர் இரண்டு தடவை பரிநிர்வாணம் அடைந்தேன்.ஆன்மீகத்தின் அதி உச்சமான நிர்வாணநிலை என்றெல்லாம் யாரும் நினைத்துவிடத் தேவையில்லை.
கேர்ணியா என்ற குடலிறக்கத்தின் ஆரம்பநிலை எப்படி இருக்கும் என்பதை OBERARZT என்ற முதன்மை வைத்தியர் தனக்கு கீழ் பணியில் சேர்க்கப்பட்ட அந்த இளம் பெண்டாக்டருக்கு கற்பிக்க என்னைப் பயன்படுத்திக் கொண்டார்.அந்தப் பெண் டாக்டர் அநியாயத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் இந்த பரிநிர்வாணநிலையை அடைந்தது என் மனைவியின் கண்ணெதிரில் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
நான் எனக்கான இந்த அறுவைச்சிகிச்சைக்காக மூன்றுநிலைகளில் தயார்படுத்தப்பட்டேன்.அதற்கான டாக்டர் அறுவைச்சிகிச்சை மிக இலகுவானதென்றும், FAMILY PLANNING பண்ணாவிட்டாலும் இரண்டு வீதமளவில் அதற்கான சேதாரம் நடைபெற வாய்ப்பிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.இதனால் சுவிஸ் சனத்தொகையில் பாதியளவை என்னால் குறைக்க முடியாது போய்விட்டாலும், அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடியளவிற்கு முடியும் என்பதை ஏற்றுக் கொண்டேன்.
மயக்கநிலைக்கு தயார்படுத்தும் டாக்டருடன் அடுத்த சந்திப்பு.முழு மயக்க நிலையில் சத்திரசிகிச்சையை எதிர்கொள்ளப் போகின்றீர்களா?அரைமயக்க நிலையில் எதிர்கொள்ளப் போகின்றீர்களா? என்பதே அவரது கேள்வியாக இருந்தது.முழுதாக மயக்கநிலைக்கு ஆட்படுத்துமாறு சொல்லிவிட்டேன்.
மூன்றாவதுநிலை நான் வேலை செய்யும் இடத்தில் விடுமுறை பெற்றுக்கொள்வது.நான் வேலைக்கு வரமுடியாத இரண்டு வாரத்திற்கும் புதிதாக ஒருவரை வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள்.
30.5.2013 தேதிகுறிக்கப்பட்டு காலை ஏழு மணிக்கு ZURICH UNIVERSITY வைத்தியசாலைக்கு வரும்படியும் பத்து மணிக்கு சத்திரசிகிச்சை செய்வதாகவும் சொல்லப்பட்டது.
முதல்நாள் இரவு பன்னிரண்டு மணிக்கப்பால் உணவு உட்கொள்ளாமல், நீரேதும் அருந்தாமல், காலை ஏழு மணியளவில் இந்த வைத்தியசாலை வளாகத்திற்கு வந்ததும், பெரிய பதைப்புடன் காத்திருந்ததும், ஒவ்வொரு கணத்தையும் பதிவாக எழுத ஆர்வத்துடன் இருந்ததும் எல்லாமுமான பொழுதில் ஒன்றும் தெரியாமல் நினைவிழந்ததும் நடந்து போய்விட்டது.
கண்விழித்துப் பார்த்தால் பகல் ஒன்றரை ஆகிவிட்டிருந்தது.கையால் அடிவயிற்றை தடவிப் பார்த்தால் ஆபரேசன் நடந்துவிட்டிருந்தது. பெரிய எதிர்பார்ப்பு போய் சப்பென்றாகிவிட்டது.அதன்பின்னர் அனஸ்தீசியா டாக்டரை சந்தித்தபொழுதில் எனக்கென்ன நடந்தது என கேட்டபொழுதில் அவர்கள் தந்த மாத்திரை ஒன்றில் நான் உறங்கிப் போய்விட்டதும், அனஸ்தீசியா தந்து தயாரானதும், ஆபரேசன் நடந்ததும் தெரியவந்தது.
நான்கு நாட்கள் இங்கேயே இருந்தாக வேண்டும்.தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.பார்வையாளர் நேரமென்பது காலையில் இருந்து மாலை வரையானது.இந்த வைத்தியசாலை ZURICH இன் சற்று உயரமான பகுதியில் அமைந்தது.இதன் சன்னலூடாக வெளியே நோக்கினால் ஒரே பார்வையில் எனது வீடு இருக்கும் பகுதியை காணலாம்.
தொடர்ந்து படுத்திருப்பது, தொடர்ந்து புத்தகம் வாசிப்பது, பின்பு எழுதுவது என நேரத்தை கழிக்க தெரியாமல் அவஸ்தையுடன் கழிந்து கொண்டிருக்கின்றது எனக்கான நேரம். வைத்தியசாலையில் தங்கியிருத்தலும், சிறையிலடைத்தலும் தான் மனிதனுக்கான அதிக பட்ச தண்டனையாக இருக்கக் கூடுமென எண்ணத் தோன்றுகின்றது.BED REST கேட்க அழகானதாக தோன்றினாலும் பெரிய சித்திரவதை அதுதான். சுதந்திரமான நடமாட்டத்தை கட்டிப்போட்டுவிட்டு, நோயாளி மனநிலையுடன் வாழ்வதே பெரிய நோய்மையும் மனமுடக்கமும்.
வியாழன் நடந்த ஆப்ரேஷனுக்கு பிறகு வந்த சனியன்றே வீடு போகப்போவதாக அங்கு கடமையிலிருந்த டாக்டரிடம் கூறிவிட்டேன். இருந்தாலும் இன்னொருநாள் பொறுத்து ஞாயிற்றுக்கிழமை வீடு ஏகலாம் என்ற டாக்டரின் கூற்றும் அடுத்த நாளின் விடுதலையும் ஆருத்ராவை களிப்பில் ஆழ்த்தின.
பாரதியாரின் “ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்ற பாடல் என் நினைவிற்கு வந்தது.
அறுவைச் சிகிச்சை பற்றிய வரைபுக்குறிப்பை இதனுடன் இணைத்து விடலாம் எனத் தோன்றுகின்றது.
அறுவைச் சிகிச்சையின் தந்தை ஆசான் எனப் போற்றப்படுபவர் சுஸ்ருதர். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட சுஸ்ருத சம்ஹிதை கி.மு. 600-800 காலப்பகுதியைச் சார்ந்தது. இந்தியாவின் வட மாநிலமான பனாரஸ் மாநில பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர். உடற்கூற்றியலை ஆரம்பத்திலேயே தெளிவாக அறிந்தவர். மனித உடலை உடற்கூற்றியலை அறிவதற்கு தடையாக சமயசம்பந்தமான தடைகள் ஐரோப்பாவில் இருந்த காலத்தில் கி.மு 600ம் ஆண்டு காலப்பகுதியில் சுஸ்ருதர் கங்கையில் இறந்த குழந்தைகளை நீரில் அழுகவிட்டு பிண்டம் நீக்கி உடற்கூற்றியலை தனது மாணவர்களுக்கு கற்பித்தார்.
அக்கால வழக்கப்படி போரில் தோற்றவர்களில் உடல் உறுப்புக்களை அறுத்துவிடும் பழக்கம் இருந்து வந்தது. அறுப்பட்டவர்களின் மூக்கு, காது என்பவற்றை வேறுபகுதிகளில் இருந்து தோல் வெட்டியெடுத்து இன்று வழக்கத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி முறையை அக்காலத்தில் முனைந்து பார்த்து வெற்றி கண்டவர் சுஸ்ருதர். மருத்துவ உலகின் சத்தியப்பிரமாண முறையை வழக்கத்திற்கு கொண்டுவந்தவரும் இவரே.
சுஸ்ருதர் பற்றிய பெரியளவிலான ஆராய்ச்சிகளை செய்த ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறை தலைவரான மெக்டோனேல் அவர்கள் சுஸ்ருதர் காலம் கி.மு. 600-800 என்பதை உறுதிப்படுத்துகின்றார்.
மகிழ்வு
நான் இன்றளவும் மகிழ்ந்து கொண்டிருப்பது நான் சுஸ்ருதர் காலத்தில் வாழவில்லை என்பதை எண்ணியே.இன்றைய மருத்துவ முன்னேற்றம் அளப்பரியது.
2010ம் ஆண்டின் விடுமுறைக்கு இந்தியா போவதாக முடிவெடுத்தவுடன் என் நினைவுக்கு வந்தது திருவண்ணாமலை. திருவண்ணாமலை பெருநகரம் கிடையாது. அருணாச்சலேச்சுவரர் ஆலயமும்,அதனை அண்டிய வணிக ஸ்தலங்களும் இணைந்த சிறு நகரம். ரமண மகரிஷி , விசிறி சாமியார் வாழ்ந்து மறைந்த திருத்தலம் என்ற அளவிலான சிறு புத்தக வாசிப்புடன் எனக்கு அறிமுகமாகிய திருவண்ணாமலையை நேரில் தரிசிப்பதற்கு ஆவலுற்ற கணங்களை இந்த சுற்றுலாப்பயணம் நிறைவேற்றித் தந்தது.
எனக்கு பிடித்த காலை உணவு வெண்பொங்கல். கூடவே சில்வர் டபாரா தட்டில் தரப்படுகின்ற காபி. நான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வளசரவாக்கத்தின் பிரதான வீதியான ஏற்காடு றோட்டில் அமைந்துள்ள சிறு உணவு விடுதிக்கு ஒன்றரை கீ.மீ தூரம் நடந்து செல்வேன். உறவினர் வீட்டில் சாப்பிடக் கிடைத்தாலும் அந்த வெண்பொங்கல் ருசிக்காக அந்த கடையை தெரிவு செய்திருந்தேன். பச்சை அரிசி, பயறு, பால் சேர்த்த அந்தப் பொங்கலில் மிதக்கும் மிளகும், சிறுசீரகமும் அந்த வாசனையும் “பேஷ்.. பேஷ்” ரொம்ப நல்லாயிருக்கும். கூடவே ஒரு சுள்ளென்ற காபியும் சாப்பிட்டால் அன்றைய காலை அழகான காலை.
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து அடங்கி கிடக்கின்ற தெருவழியே விரைந்து கோயம்பேடு அடைந்தால், கோயம்பேடு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. கோயம்பேடு மத்திய சந்தை தொகுதிக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் காய்கறிகள் லாறிகளில் கொண்டு வரப்பட்டு மொத்த விற்பனையாவது வாடிக்கை. அந்த இரைச்சலான அதிகாலையும், விற்பனை பரபரப்பும் கோயம்பேட்டிற்கு மாத்திரமே உரித்தானது.
காலை 9.00 மணியளவில் கோவிலை அடைந்திருந்தோம். கோவிலின் மூலவரை தரிசித்து விட்டு அதற்கு அருகில் ரமணர் சிறுவயதில் தங்கியிருந்த குகை கோவிலையும் தரிசித்துவிட்டு வீதிவழியே இறங்கி நடந்தால் ரமணாச்சிரமம் வருகின்றது. அங்கு அதிகமான நேரம் செலவழிப்பதற்கு தேவையிருந்தது. மிக அமைதியான இடம். இரண்டு நாட்களாவது தங்கியிருந்து அந்த அமைதியை இரசிக்கலாம். ரமணாச்சிரமத்தின் பின்புறத்தில் விருப்பாட்சி தேவரின் குகை இருக்கின்றது. மலையில் ஏறி சிறிது தூரம் பயணிக்க வேண்டும். இந்த மலைப் பயணத்தில் திருவண்ணாமலையை மேலிருந்து கண்டு உவகையடையலாம்.
ரமணாச்சிரமத்திற்கு பின்பு கிரிவலம் வந்தோம். கிரிவலம் என்பது திருவண்ணாமலை கோவிலை புறவீதி வழியே சுற்றுவது. 8 கீ.மீ நீளமான இந்தப்பிரயாணத்தில் பல இறையனார்கள் முக்தியடைந்த சமாதிகளையும், அதனைச் சுற்றியுள்ள இடங்களையும், அழகான திருவண்ணாமலைக் கிராம சூழலையும் காணலாம். உண்மையில் கிரிவலம் என்பது நடந்துதான் போகவேண்டும். நெருக்கமான பயணத்திட்டத்தில் தரிசிப்பவர்களுக்கு ஆட்டோ உகந்தது. ஆட்டோ ஓட்டுநர்கள் தேவையான இடங்களில் ஆட்டோவை நிறுத்தும் போதில் ஆங்காங்கேயுள்ள அந்த சிறு தலங்களை தரிசிக்கலாம்.
திருவண்ணாமலையை எண்ணும் போதும் எழுதும் போதும் அங்கேயே ஒரு நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும் என்ற உள்மனக்கிடக்கை எனக்குள் உறங்கிக் கிடக்கின்றது. கிரிவலம் முடிந்து மதியத்தின் பெரும்பசியை விசிறி சாமியார் என்றழைக்கப்படுகின்ற ராம் சூரத்குமார் ஆச்சிரமத்தில் நிவர்த்தித்து கொண்டோம். அருமையான உணவு. அற்புதமான சுவை. காலாறா நடந்தால் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் வழியே நடந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அ ருமையான கிராமியச் சூழல்.
விசிறி சாமியாரின் பெரு ஆச்சிரம வளாகத்தில் தங்கியிருந்து வழிபட்டு திருவண்ணாமலை கடைத்தொகுதிகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு 4 மணி வாக்கில் திரும்ப பஸ் பிடித்தால் 9 மணியளவில் வளசரவாக்கம் வந்து விடலாம்.நான் என் மனைவியுடன் தனித்து செய்த நீண்ட பிரயாணமாக திருவண்ணாமலை விளங்குகின்றது.
பெரிய பாடசாலையின் பின்புறமுள்ள கனிஸ்டபிரிவு கட்டடம் இப்போது என்னவாக இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பது தெரியவில்லை. முப்பந்தைந்து வருடங்களுக்கு முன்னரான காலத்தில் “பிடியதன் உருவுமை” ,”சொற்றுணை வேதியன்” சொல்லித்தந்த இடம். அந்தக்கட்டடத் தொகுதியின் முதல் அறை அழகரத்தினம் ஆசிரியையுடைய இரண்டாம் வகுப்பு. அதற்குப் பக்கத்திலேயே சிறுவர்கள் நம்பர் ONE போகும் அறையும் நெருங்கி இருந்ததால் அந்த இரண்டாம் வகுப்பு மறுநினைவிற்கு மூத்திர வகுப்பாக முன்நிற்கின்றது.
மிகக் கறுப்பான வைத்திலிங்கம் மாஸ்ரர் அவர்கள் கனிஸ்டபிரிவு அதிபராக கடமையாற்றியதாகவும், அவரது அதிபர் அறை கால் வைக்க கூசும் கவலைக்குரிய பிரதேசமாக எமக்கு ஆகிப்போயிருந்ததையும் சொல்லியாக வேண்டும். அவரிடம் சிக்கிக்கொண்டால் சின்னாபின்னப்பட்டு போய்விடுவோமோ என்கின்ற பயம் ஆறாம் வகுப்பு கற்கும்வரை மறையாமல் இருந்தது.
எங்கள் ஐந்தாம் வகுப்பு காலங்கள் கணபதிப்பிள்ளை என்ற ஆசிரியையுடயவை. ஆசிரியைகள் எவரும் அவர்களது கணவர் பெயர்களால் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அந்த ஆசிரியைகளது சொந்த பெயரை அறியும் ஆவல் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுண்டு. ஒவ்வொரு பெண்ணின் பெயர்களும், அடையாளங்களும், பெண்ணின் அதீத விருப்புடன் ஆணாதிக்க சுவர்களுக்குள் வெட்டி வீழ்த்தப்பட்டதை கவலையுடன் கவனித்திருக்கின்றேன்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரி பற்றிய பதிவில் பூ.வெற்றிவேறு என்கின்ற ஆளுமை மிக்க, மற்றவர்களால் கீழ்படிதலோடு மதிக்ககூடிய, கம்பீரமான எங்கள் அதிபரை பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அன்று பரீட்சை என்பதாலும் மதிலால் எட்டிப்பார்த்ததில் அதிபர் அறை பூட்டப்பட்டிருக்கின்றது என்றதாலும் பாடசாலைக்குள் சைக்கிள் ஓடி வந்தால் அவர் அதிபர் அறையின் வராந்தாவில் நின்று கொண்டிருக்கின்றார். அவர் யாரையாவது கூப்பிட வேண்டுமானால் கைதட்டிக் கூப்பிட்டுக் கொள்வதும் எனக்கும் அவ்வாறே நிகழ்ந்ததும் நினைவில் நிற்கின்றது.
இரண்டு தடவை HALLக்குள் வந்து எட்டிப்பார்த்து விட்டு கைக்கு அகப்படாத கோபத்தில் அதிபர் சென்று விட்டார். அவர் எனக்கருகில் வந்திருந்தால் பயத்திலேயே நடுங்கி பிடிபட்டிருப்பேன். தினமும் கனவுகளை தின்று செரித்து வாழும் எனக்கு தற்போதெல்லாம் அதிபரிடம் ஒரு அடி வாங்கியிருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகின்றது.
படிப்புகளை பெற்றுக்கொள்கின்ற இடமாக பாடசாலைகள் திகழ்கின்றன என்றால் நான் பெரும் படிப்பினையை பெற்றுக்கொண்ட இடமாக அது திகழ்கின்றது. மீளமுடியாத கனவுகளையும், தாளமுடியாத துக்கங்களையும் பாடசாலை பரிசளித்திருப்பின் அவைகள் படிப்பினைகள் தானே.வேறென்ன சொல்வது?
பாடசாலை மனதிற்கு நெருக்கமானது. அழகானது. நெஞ்சார்ந்த உவகையை அள்ளித்தருவது.பக்கத்திலே இராமநாதன் வீடு, சைக்கிள் விட்டு வருகின்ற விதானையார் வீடு, முருகமுர்த்தி கோவில், அதற்கு முன்னான சனசமுக நிலையம் என சற்று நேரம் நின்று நெடு மூச்செறியலாம். வாழ்வு அதற்குத்தான் வாய்ப்பளித்திருக்கின்றது.பாடசாலைக் காலங்கள். சொர்க்கத்தின் உற்சவங்கள்.
புத்தர் தனது 16வது வயதில் தரிசித்த மூப்பு, பிணி, சாக்காடு பற்றிய வாழ்க்கை நிதர்சனங்கள் எனக்கு இந்த வயதில் வந்து வாய்த்திருக்கின்றது. புத்தரைப் போன்று தப்பித்து செல்லமுடியாது. “போய்வா அனுபவித்து வா”என்று அனுப்பி வைத்து விட்டு கைகொட்டிச் சிரித்தது என் மீதமுள்ள வாழ்க்கைக்காலம். இதற்கு நடுவில் எனது பிரயாணம் குறித்து தெரிந்த நல்ல உள்ளங்கள் “பிரயாணம் சிறப்பாக அமையட்டும்” என்று அனுப்பி வைத்த குறுஞ்செய்திகள் என் கைத்தொலைபேசியில் பதிவாயின. கடவுளே!
அதைவிட மோசமானது பிரயாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக கையோடு எடுத்து செல்வதற்கு ஆக எடுத்து தந்திருந்த பிரயாணப் பை. BODY LINE BRAND உள்ளாடை (கோவணம் என்றும் சொல்லலாம். BRANDED உள்ளாடை அணியும் முதல் மனிதா) நான்கைந்து கோப்பு நிறைய காகிதங்கள் (வீட்டு உறுதி,சோலைவரி கட்டிய ரசீதுகள்) எல்லாம் உள்ளடங்கி வயிறு உப்பி 10 கிலோவாகி இருந்த பிரயாணப்பையின் கீழ்ச்சக்கரம் லொடலொடத்தது. ஓட்டுமொத்த உலகமும் இந்த பிரயாணத்திற்கெதிராக சதி செய்வதாகப்பட்டது.
ஒவ்வொரு அரைமணிக் கொருதரம் வணிக வளாகத்தை பார்வையால் மேய்ந்துவிட்டு திரும்பவும் உறங்குவதற்கு தோதாக அமைக்கபட்ட இருக்கையில் அமர்ந்து எதையாவது நோண்டி நொங்கெடுத்து, அலுத்துப்போய் அடுத்த விமானமேறி கட்டுநாயக்க போயடைந்தால் என்னை அழைத்துப் போக வந்திருந்தது வழக்கமாக அழைத்துப்போக வரும் அப்பா அல்ல; சித்தி மகன்.
விமான நிலையத்தை அடைந்ததும் புலன் நுகர்ச்சி, வேறு விதமானதட்பவெப்பம் , வாகனப் புகைகளின் வாசனை, புழுதி மணம் என்பதாக பழைய நினைவுகளோடு ஒன்றிப்போகும். இலங்கையும் இருபது வருட மாற்றத்திற்கு ஊடாக மாறுபட்டிருக்கின்றது. உள்நுழைந்து பொருட்களை தெரிவு செய்து வாங்கும் CARGILLS களும் KEELS SUPER MARKET களும் எங்கும் பெருகிவிட்டன.BROILER கோழிகள் கழுத்தில் தூக்கு போட்டபடி ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தன. வங்கிகளில் வங்கி அட்டைகளில் 10 ஆயிரத்திற்கு உட்பட்ட தொகைகளை பெற்றுக்கொள்ளும் பணப்பட்டுவாடா இலகுவாக்கப்பட்டிருக்கின்றது. குப்பை பொறுக்கும் குப்பனும் சுப்பனும் காதுக்குள் தொலைபேசியை பொருத்திக் கொண்டு வேலை நேரத்தில் உரையாடிக் கொள்ளும் கனத்த கலாச்சாரம் தேசிய மயமாக்கப்பட்டிருக்கின்றது.MINI SKIRT கள் முட்டிக்கு மேலான SHOTRS களாகி விட்டன. (தயா! இவ்விடத்தில் கவனிக்க… அண்ணை போன அலுவலை விட வேறு அலுவலும் கவனிக்கிறார்.)
வீட்டை அடைந்தால் அம்மா வந்து அன்புடன் கட்டிக் கொண்டார்கள். அப்பா கைபற்றி விசிப்புடன் சிறு விசும்பல். நேற்றியில் சூடான முத்தம். நீண்ட நேரம் கனத்த பெரு மௌனம். ஒரே வருடத்திற்குள் இரண்டாவதான பயணம் என்றாலும் அப்பாக்களின் அம்மாக்களின் அழுகைகளும், விசும்பல்களும் அன்பும் பெருகித்தான் போயின.
உடைந்து சிதைந்த
நான் உயிர்வாழ